| கொழுந்துகள் உயிர்க்கும்; யாக்கை குலைவுறும்; தலையே கொண்டுற்று உழும் தரைதன்னை; பின்னும் இனையன உரைப்பதானான்; |
எழுந்து அவன் மேலே பாய எண்ணும் - (பிறகு) எழுந்து அவ்விந்திரசித்துவின் மேலே பாயலாமா? என எண்ணுவான்; பேர் இடரில் தள்ளி விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் - தான் பெருந்துன்பத்தில் தள்ளிவிடப் பட்டவனாக விழுந்து, வெம்மையான பெருமூச்சு விட்டு திணறி முகம் வீங்குவான்; போய் மெலியும் வெந்தீக் கொழுந்துகள் உயிர்க்கும் - அந்நிலைபோய் மெலிவுறுவான் வெப்பமான அனற்கொழுந்துகளையே உயிர்ப்பான்; யாக்கை குலைவுறும் - உடல் நடுங்குவான்; தலையே கொண்டுற்று தரை தன்னை உழும் - தன் தலையையே கொண்டு தரையைப் பொருந்தி உழுவான்; பின்னும் இனையன உரைப்பதானான் - பின்னர் இத்தன்மையான சொற்களைச் சொல்லலானான். |
(44) |
8884. | ‘“முடிந்தது நம்தம் எண்ணம்; மூஉலகிற்கும் கங்குல் விடிந்தது”என்று இருந்தேன்; மீள வெந் துயர் இருளின் வெள்ளம் படிந்தது; வினையச் செய்கை பயந்தது; பாவி! வாளால் தடிந்தனன் திருவை! அந்தோ, தவிர்ந்தது தருமம் அம்மா! |
முடிந்தது நம் தம் எண்ணம் - நமது எண்ணம் முடிந்தது; “மூஉலகிற்கும் கங்குல் விடிந்தது” என்று இருந்தேன் - மூன்று உலகங்கட்கும் துன்ப இருள் விடிந்தது என்று இருந்தேன்; மீள வெந்துயர் இருளின் வெள்ளம் படிந்தது - மீளவும் கொடிய துன்பமாகிய இருளின் பெருக்கு வந்து படிந்தது; வினையச் செய்கை பயந்தது - வஞ்சகச் செய்கையே பயனளித்து விட்டது; பாவி! வாளால் தடிந்தனன் திருவை! - பாவியாகிய இந்திரசித்து திருமகளின் அமிசமான சீதையை வெட்டி வீழ்த்தி விட்டான்; அந்தோ தருமம் தவிர்ந்தது - அந்தோ தருமம் தவிர்ந்து விட்டதே. |