| பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப, வெங் கண் நீர் அருவி சோர, மால் வரை என்ன வீழ்ந்தான். | சிங்க ஏறு அனைய வீரன் செறிகழல் பாதம் சேர்ந்தான் - ஆண் சிங்கத்தைப் போன்ற வீரனாகிய இராமனது வீரக்கழல் அணிந்த பாதத்தை நெருங்கிய அனுமன்; அங்கமும் மனமும் கண்ணும் ஆவியும் அலக்கணுற்றான் - உடம்பும், உளமும் கண்ணும் உயிரும் பதைக்கத் துயரமுற்றவனாய்; பொங்கிய பொருமல் வீங்கி, உயிர்ப்பொடு புரத்தைப் போர்ப்ப - மனத்துள் பொங்கி எழுந்த அழுகைப் பொருமல் பெருகிப் பெருமூச்சோடு உடம்பின் புறத்தை மூடிக்கொள்ள; வெங்கண் நீர் அருவி சோர, மால்வரை என்ன வீழ்ந்தான் - வெம்மையான கண்ணீர் அருவிபோல வீழ பெரிய மலை வீழ்வது போல வீழ்ந்தான். | (54) | 8894. | வீழ்ந்தவன்தன்னை, வீரன், ‘விளைந்தது விளம்புக!’ என்னா, தாழ்ந்து, இரு தடக் கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான், ஆழ்ந்து எழு துன்பத்தாளை, அரக்கன், இன்று, அயில் கொள் வாளால் போழ்ந்தனன்’ என்னக் கூறி, புரண்டனன், பொருமுகின்றான். | வீழ்ந்தவன் தன்னை வீரன் ‘விளைந்தது விளம்புக!’ என்னா - வீழ்ந்தவனாகிய அனுமனை, ‘நடந்ததைக் கூறுக’ என்றவாறு; தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும், தரிக்கிலாதான் - குனிந்து அவனுடைய பெரியகைகளைப் பற்றி எடுக்கவும், எடுக்கத்தரிக்கிலாதவனாய்; ‘ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள்வாளால்- ஆழப் பதிந்து எழுகின்ற துன்பத்தையுடைய சீதாபிராட்டியை அரக்கனாகிய இந்திரசித்து இன்று கூர்மையான வாளினால்; போழ்ந்தனன்’ என்னக் கூறிப் புரண்டனன், பொருமுகின்றான் - பிளந்து விட்டான்’ என்று கூறி (மண்ணில்) புரண்டு விம்முவானாயினன். | (55) |
|
|
|