| குலங்களோடு அடங்கக் கொன்று, கொடுந் தொழில் குறித்து, நம்மேல் விலங்குவார் என்னின், தேவர் விண்ணையும் மண்ணில் வீழ்த்தும். |
இலங்கையை இடந்து வெங்கண் இராக்கதர் என்கின்றாரைப் - இலங்கை நகரத்தையே பெயர்த்து விட்டு கொடிய கண்களை உடைய அரக்கர் என்பவர்களை; பொலங்குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் - பொன்னாலியன்ற குழையினை அணிந்த மனைவியரோடும் பாலுண்கின்ற புதல்வர்களோடும்; குலங்களோடு அடங்கக்கொன்று, கொடுந்தொழில் குறித்து - இனத்தோடு அழியுமாறு கொன்று; அக்கொலைத் தொழிலைக்குறித்து; நம்மேல் விலங்குவார் தேவர் என்னின் - நம்மேல் வெகுண்டு வந்து தேவர்கள் தடுப்பாராயின்; விண்ணையும் மண்ணில் வீழ்த்தும் - அவர்களது விண்ணுலகத்தையும் இம்மண்ணுலகத்தில் வீழ்த்துவோம். |
(71) |
8911. | ‘அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின், ஐய! புறம் கிடந்து உழைப்பது என்னே? பொழுது இறை புவனம் மூன்றும் கறங்கு எனத் திரிந்து, தேவர் குலங்களைக் கட்டும்’ என்னா, மறம் கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல் வாவலுற்றான். |
அறம் கெடச் செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் - ‘அறங்கெடுமாறு (செயல்) செய்வோம் என்றே துணிந்து விட்டோமாயின்; ஐய! புறம் கிடந்து உழைப்பது என்னே - ஐயனே! புறத்தே கிடந்து வருந்துவது எதற்காக? இறைபொழுது புவனம் மூன்றும் கறங்கு எனத் திரிந்து - சிறிது பொழுதினுக்குள் உலகங்கள் மூன்றிலும் காற்றாடி போலத்திரிந்து; தேவர் குலங்களைக் கட்டும் என்னா - தேவர் குலங்களையும் களைந்தெறிவோம்’ என்று கூறியவாறு; மறம் கிளர் வயிரத்தோளான் இலங்கை மேல் வாவலுற்றான் - வீரம் விளங்குகின்ற வயிரம் போன்ற தோள்களை உடையவனான சுக்கிரீவன் இலங்கை மேல் பாயத் தொடங்கினான். |
(72) |