நெஞ்சினன் ஆகி - மிகப் பெரிய மகிழ்ச்சி தங்கிய மனத்தினனாய்; உள்ளம் தள்ளுறல் ஒழிந்து நின்றான் - (முன்பு ஏற்பட்ட) மனத்தடுமாற்றம் நீங்கி நின்ற வீடணன்; வெஞ்சிலை மைந்தன் போனான் - கொடிய வில்லை உடைய இந்திரசித்து அயோத்திக்குப் போக்குக் காட்டிப் போனவன்; நிகும்பலை வேள்வியான் என்று - நிகும்பலை என்ற கோயிலில் வேள்வி செய்து கொண்டிருக்கின்றான் என்று; எஞ்சல் இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏகக் கண்டான் - குறைவில்லாத அரக்கர் சேனை எழுந்து எழுந்து அவ்விடத்திற்குப் போகக் கண்டான். | (91) | 8931. | ‘வேழ்விக்கு வேண்டற்பால கலப்பையும், விறகும், நெய்யும், வாழ்விக்கும் தாழ்வில்’ என்னும் வானவர் மறுக்கம் கண்டான், சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று!’ எனத் துணிவு கொண்டான், தாழ்வித்த முடியன், வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான். | வேழ்விக்கு வேண்டற்பால கலப்பையும் விறகும் நெய்யும் - “வேள்விக்கு வேண்டியனவான கலவைப் பொருள்களும், விறகும், நெய்யும்; தாழ்வில் வாழ்விக்கும் என்னும் - நம்மைத் தாழ்வில் வாழ்விக்கப் போகின்றதே” என்று; வானவர் மறுக்கம் கண்டான் - தேவர்கள் கலங்குதலையும் கண்டு; ‘சூழ்வித்த வண்ணம்’ ஈதோ நன்று; எனத் துணிவு கொண்டான் - ‘இந்திரசித்து சூழ்ச்சி செய்த வண்ணம் இதுதானோ நல்லது!’ எனத் துணிவு கொண்டவனாய்; தாழ்வித்த முடியன் வீரன் தாமரைச் சரணம் தாழ்ந்தான் - வணங்கிய தலையினனாய் இராமனுடைய தாமரைமலர் போன்ற பாதங்களைச் சேர்ந்தான். | கலப்பை - வேள்வியி்ல் தருகின்ற அவிசுக்காகக் கலக்கும் கலவைப் பொருள்கள். மறுக்கம் - கலக்கம், மாயத்தால் சீதையைக் கொன்றதுபோல் காட்டியதும், அயோத்திமேல் போவதாகப் போக்குக் காட்டியதும், நிகும்பலை வேள்விக்காகவே என்பான் ‘சூழ்வித்த வண்ணம் ஈதோ?” என்றனன். ஈதோ என்றது இதற்குத் தானோ என்ற பொருளிலாம். வேள்வி எதுகை நோக்கி ‘வேழ்வி’ என ஆயிற்று. | (92) |
|
|
|