இவ்வுலகுக்கு ஆணி ஆன ஆழியான் - இவ் உலகினுக்கு அச்சாணி போல நின்று முறைப்படுத்துகின்ற சக்கரப் படையினை உடைய (திருமாலாகிய) இராமன்; புறத்தின் ஆர்த்த தூணியும் கொடுத்து - தன் முதுகிற் கட்டியுள்ள அம்புப் புட்டிலையுங் கொடுத்து; மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி - மற்றும் உறுதி மொழிகள் பலவும் கூறி; தாணுவின் தோற்றத் தானைத் தழுவினன் - சிவபெருமானைப் போன்ற தோற்றத்தை உடையவனான இலக்குவனைத் தழுவிக்கொண்டான்; தழுவலோடும் சேண் உயர் விசும்பில் தேவர் - அங்ஙனம் தழுவி (ப் போர்க்கு) விடை கொடுத்தவுடனே மிக உயர்ந்த விண்ணுலகவராகிய தேவர்கள்; தீர்ந்தது எம் சிறுமை என்றார - எம்முடைய துன்பம் தொலைந்தது என்று கூறி மகிழ்ந்தனர்.
ஆணி - தேரின் சக்கரம் கழலாதபடி அச்சின் கடையிற் செருகப்படுவது. தேரின் இயக்கம் தடைப்படாமல் நின்று காப்பது. இங்ஙனமே உலகம் இடையூறின்றி இயங்குதற்குத் தோன்றி நிற்றலின் இராமனை “இவ்வுலகுக்கு ஆணி ஆன ஆழியான்” என்றார். புறம் - முதுகு. ஆர்த்த - கட்டிய. தூணி - அம்புப்புட்டில் தாணு - சிவபெருமான். அப்பெருமான் “செம்மேனி அம்மான்” ஆகையினால் அந்நிறத்தினைக் கொண்ட இலக்குவனை “தாணுவின் தோற்றத்தான்” என்றார். சிறுமை - துன்பம். இந்திரசித்தனால் அடியுண்ட அவமானத்தால் ஏற்பட்ட நாணம் எனினுமாம்.
(10)
நிகும்பலை செல்லுதல்
8944.
மங்கலம் தேவர் கூற, வானவ மகளிர் வாழ்த்தி, பங்கம் இல் ஆசி கூறி, பலாண்டு இசை பரவ,-பாகத் திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்கச் சீறிப் பொங்கினன் என்ன, தோன்றிப் பொலிந்தனன்-போர்மேல் போவான்.
தேவர் மங்கலம் கூற வானவ மகளிர் வாழ்த்தி - தேவர்கள் மங்கலம் கூறி வாழ்த்தவும் தேவமகளிர் வாழ்த்தி; பங்கம் இல் ஆசி கூறிப் பலாண்டு இசை பரவ - குற்றமில்லாத ஆசிகளைக் கூறி பல்லாண்டு என்னும் இசை பாடிப் பரவவும்; போர் மேல் போவான் - போர்மேற் செல்வானாகிய இலக்குவன்; பாகத் திங்களின் மோலி அண்ணல் - பிறை சூடிய சடையனாகிய சிவ