வாயில் கனல் வெங்கடு வாளி இனம் பாய - முனையின் கண்ணே தீயினையும், கொடிய நஞ்சினையும் கொண்ட அம்பின் தொகுதிகள் பாய்ந்து தைத்தலால்; பருமக்குலம் வேவனவால் சினக்கரியே - தம் மேலுள்ள கழுத்து மெத்தை முதலியவற்றின் தொகுதிகள் எரிந்து வேகும் நிலையிலுள்ளனவாகிய வெகுளி மிக்க யானைகள்; வேய் உற்ற நெடுங்கரி மீ - மூங்கில் அடர்ந்துள்ள நெடிய மலைகள் மீது; வெயில் ஆம் தீ உற்றன ஒத்த - வெவ்விய நெருப்புப் பற்றி எரிவனவற்றை ஒத்தன. |
(39) |
8973. | அலை வேலை அரக்கரை, எண்கின் உகிர், தலைமேல் முடியைத் தரை தள்ளுதலால், மலைமேல் உயர் புற்றினை, வள் உகிரால், நிலை பேர, மறிப்ப நிகர்த்தனவால். |
அலைவேலை அரக்கரை எண்கின் உகிர் - அலைகளை உடைய கடல் போன்ற அரக்கரை (வானர சேனையிலுள்ள) கரடிகள் தம் நகங்களால்; தரைமேல் முடியைத் தவிர தள்ளுதலால் - (அவர் தம்) தலை மீதுள்ள மணி முடியினைப் (பெயர்த்து) தரையில் தள்ளுதலால்; மலைமேல் உயர் புற்றினை வள்உகிரால் - மலை மீது உயர்ந்து வளர்ந்துள்ள புற்றினைக் கூரிய நகங்களால்; நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் - நிலை பெயரும் படி பெயர்த்துத் தள்ளுவனவற்றை ஒத்தன. |
(40) |
8974. | மா வாளிகள் மா மழைபோல் வரலால், மா ஆளிகள் போர் தெறு மா மறவோர், மா ஆளிகள் வன் தலையின்தலை வாம் மா ஆளிகளோடு மறிந்தனரால். |
மாவாளிகள் மா மழைபோல் வரலால் - (இலக்குவனது) பெருமை வாய்ந்த அம்புகள் பெரும் மழையைப் போன்று (மிக்கு) வந்தமையால்; மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் - பெரிய சிங்கங்களைப் போரில் வெல்லவல்ல மாவீரர்களாகிய அரக்கர்களும்; மா ஆளிகள் - (யானை, குதிரை என்னும்) விலங்குகளை (ப்போரில்) ஆளும் வீரர்களும்; வன்தலையின் தலைவாழ் - (தமது) வலிய தலையிடத்தே (அணியப் பெற்றுள்ள மலர்களிடத்தில் உள்ளவாம்); மா ஆளிகளோடு மறிந்தனரால் - கரிய வண்டுகளோடும் இறந்துபட்டனர். |