நோன் - வலிமை. வாள் - கூர்மை. சோரியின் ஆறு - இரத்த ஆறு. |
(55) |
8989. | நஞ்சினும் வெய்யவர் நடுங்கி, நா உலர்ந்து, அஞ்சினர், சிலர் சிலர் அடைகின்றார்; சிலர் வெஞ் சின வீரர்கள், மீண்டிலாதவர், துஞ்சினர், துணை இலர் எனத் துளங்கினார். |
நஞ்சினும் வெய்யவர் சிலர் சிலர் அஞ்சினார் - நஞ்சை விடக் கொடுமையுடையோரான அரக்கர்களுட் சிலர் சிலர் (இலக்குவன் முன் நிற்கலாற்றாது) அஞ்சியவர்களாய்; நடுங்கி நாவுலர்ந்து அடைகின்றார் - நடுக்கமுற்று நாவறண்டு இந்திரசித்தை அடைவாராயினர்; வெஞ்சின வீரர்கள் மீண்டிலாதவர் சிலர் - மிக்க வெகுளியுடைய அவ்வீரர்களுள் மீண்டு வரமுடியாதவர் சிலர்; துணை இலர் எனத் துளங்கினார் துஞ்சினர் - தம்மைத் தாங்கும் துணையில்லாதாரைப் போன்று மனந்துளங்கி இறந்தனர். |
(56) |
வேள்வித் தீ அவிதல் கண்டு இந்திரசித்தன் வெதும்புதல் |
8990. | ஓம வெங் கனல் அவிந்து, உழைக் கலப்பையும், காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற, வாம மந்திரத் தொழில் மறந்து, நந்துறு தூம வெங் கனல் எனப் பொலிந்து தோன்றினான். |
ஓமவெங்கனல் அவிந்து - (வேள்விக்குண்டத்தில்) ஓமம் செய்யப்படும் வெம்மையுடைய தீ அவிந்து; உழைக் கலப்பையும் காமர்வண் தருப்பையும் - (வேள்வியிற்) பயன்படுத்தற்குரிய பொருள்கள் நிறைந்த பையும், அழகிய வளம் நிறைந்த தருப்பையும்; பிறவும் கட்டு அற வாம மந்திரத் தொழில் மறந்து - பிற பொருள்களும் கட்டுக்குலைந்து அழிய வாம மந்திரங்களை எண்ணுதலாகிய தொழிலை மறந்து; நந்துறு தூம வெங்கனல் எனப் பொலிந்து தோன்றினான் - அவியும் நிலையிற் புகை படர்ந்த வெம்மையுடைய (வேள்வித்) தீயினைப் போன்று (தானும்) பொலிவிழந்து காணப்பட்டான். (இந்திரசித்து) |
(57) |
8991. | அக் கணத்து, அடு களத்து, அப்பு மாரியால் உக்கவர் ஒழிதர, உயிர் உளோர் எலாம் |