பக்கம் எண் :

800யுத்த காண்டம் 

என்தோளும்     போனதோ?  -  இப்பொழுது  வெகுண்டு  போர்
செய்தற்குரிய     ஆற்றல்     மிக்க    என்தோள்களும்    இல்லா
தொழிந்தனவோ?
 

                                                 (64)
 

8998.

‘”மந்திர வேள்வி போய் மடிந்ததாம்” எனச்
சிந்தையின் நினைந்து, நான் வருந்தும் சிற்றியல்,
அந்தரத்து அமரரும், “மனிதர்க்கு ஆற்றலன்;
இந்திரர்க்கே இவன் வலி!” என்று ஏசவோ?’
 

மந்திர  வேள்வியோய்   மடிந்ததாம்  எனச்  -  மந்திரத்துடன்
இயற்றப்படும்    யாகம்   சென்று   அழிந்ததாம்  என்று;  சிந்தையின்
நினைந்து நான்  வருந்தும்  சிற்றியல்
 -  மனதிலே நினைந்து நான்
வருந்தும்  சிறுமைத்தன்மை;  அந்தரத்து அமரரும் - வானத்திலுள்ள
தேவர்களும்; “மனிதர்க்கு ஆற்றலன்; இந்திரர்க்கே  இவன்  வலி!”
என்று  ஏசவோ?
 -  (இவ்விந்திரசித்து)  ‘மனிதன் ஒருவனுக்கு (எதிர்
நிற்க)  ஆற்றாதவனாயினான்,  இவனது  வலிமை  இந்திரனை வெற்றி
கொள்வதற்கு     மட்டுமே’     என     (என்னைக்     குறித்துப்)
பழித்துரைத்தற்காகவோ?
 

                                                 (65)
 

8999.

என்று அவன் பகர்கின்ற எல்லை, வல் விசை,
குன்றொடு மரங்களும், பிணத்தின் கூட்டமும்,
பொன்றின கரிகளும், கவிகள் போக்கின;
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின.
 

என்று     அவன் பகர்கின்ற எல்லை - என்று அவ்இந்திரசித்து
(தனக்குள்)   சொல்லிக்   கொண்டிருக்கும்   பொழுதில்;   குன்றொடு
மரங்களும்  பிணத்தின்  கூட்டமும்
 -  குன்றுகளோடு மரங்களையும்
பிணத்தின் தொகுதிகளையும்; பொன்றின கரிகளும் கவிகள் வல்விசை
போக்கின
- இறந்த யானைகளையும் குரங்குகள் வலிய விசையினோடு
(அரக்கர் மேல்) வாரி வீசின; சென்றன பெரும் படை இரிந்து சிந்தின
-    (இந்திரசித்தனுடன்)    சென்றனவாகிய    பெரும்   சேனைகள்
நிலைகெட்டுச் சிதறின.
 

                                                 (66)
 

9000.

ஒதுங்கினர், ஒருவர் கீழ் ஒருவர் புக்குறப்
பதுங்கினர், நடுங்கினர்; பகழி பாய்தலின்,
பிதுங்கினர்; குடர் உடல் பிளவு பட்டனர்;
மதம் புலர் களிறு எனச் சீற்றம் மாறினார்.