‘தடந் திரைப் பரவை அன்ன சக்கர யூகம் புக்குக் கிடந்தது கண்டது உண்டோ? நாண் ஒலி கேட்டிலோமே? தொடர்ந்து போய் அயோத்திதன்னைக் கிளையொடும் துணிய நூறி, நடந்தது எப்பொழுது? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே!
தடந்திரைப் பரவை அன்ன சக்கர யூகம் - பெரிய அலைகளை உடைய கடல் போன்ற சக்கரவியூகமாக அமைந்த (நினது) சேனை; புக்குக் கிடந்தது கண்டது உண்டே? - (இவ்விடத்துப்) புகுந்து கிடந்ததே? (அதனைத்தாங்கள்) கண்டது உண்டோ? நாண் ஒலி கேட்டிலோமே - (அதன்) வில்நாண் ஒலியைக் கூட நாங்கள் கேட்கப் பெற்றிலோமே? தொடர்ந்து அயோத்திபோய் - தொடர்ந்து அயோத்தி நகரத்தினை அடைந்து; தன்னைக கிளையொடும் துணிய நூறி - பரதனை சுற்றத்தோடும் (உடல்) துண்டிக்கப்பட்டு வீழும்படி கொன்றுவிட்டு; நடந்தது எப்பொழுது - (தாங்கள் இங்கு) மீண்டு வந்தது எப்பொழுதோ? வேள்வி முடிந்ததே? கருமம் நன்றே? - தொடங்கிய யாகம் முற்றுப் பெற்றதல்லவா? எண்ணிய செயல் நன்மையை விளைவித்ததல்லவா?
(70)
9004
‘ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து, இயற்கை தாங்கும் பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை, பழியின் தீர்ந்த வேந்தனை, கண்டு, நீ நின் வில் வலி காட்டி, மீண்டு போந்ததோ, உயிரும் கொண்டேஆயினும், புதுமை அன்றே!
ஏந்து அகல் ஞாலம் எல்லாம்இனிது உறைந்து - (அனைத்தையும்) தாங்குகின்ற அகன்ற நிலவுலகம்