பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 81

கடல் அன்று; இது என் எந்தை கடக் கரியான்
உடல்’ என்று, உயிரோடும் உருத்தனனால்.

இதுமிடல்  ஒன்று  சரத்தொடு  -  (இது)  வலிமை  பொருந்திய
அம்புகளோடு; மீது உயர்  வான்திடல்  அன்று  -  மேலே மேடாக
உயர்ந்திருக்கிற   திட்டு   அன்று;  திசைக்களிறு  அன்று  -  திசை
யானைகளின்  (உடலும்)  அன்று; ஒரு திண் கடல் அன்று - ஒப்பற்ற
வலிமையான கடலும்  அன்று; எந்தை கடக் கரியான் உடல் என்று -
என்  தந்தையாகிய  போரில்  கடத்தற்கு அரியவனான  கும்பகருணின்
உடல்  என்று (உணர்ந்து); உயிரோடும் உருத்தனனால் - (அதிகாயன்)
பெரு மூச்சு விட்டுச் சினப்பட்டான்.

இது  சரத்தொடு கூடிய உயர்ந்த திடல் அன்று. களிறு அன்று. திண்
கடல்  அன்று  என  மறுத்துக்  கும்பகருணன்  உடல்  என்பது  பெற
வைத்தார். அவன் உடல் திடல், களிறு, கடல் போலும் என்க.  மிடல் -
வலிமை.    கடக்கரியான்   என்பதற்கு   மதம்   கொண்ட    யானை
போன்றவன்   என்றும்,  யானைப்  படையை  உடையவன்    என்றும்
பொருள் உரைப்பார் உளர்.

                                                  (29)

7756.‘எல்லே! இவை காணிய எய்தினனோ!
வல்லே உளராயின மானுடரைக்
கொல்லேன், ஒரு நான், உயிர் கோள் நெறியில்
செல்லேன், எனின், இவ் இடர் தீர்குவெனோ?’

எல்லே   - அந்தோ; இவை காணிய எய்தினெனோ - இவற்றைக்
காண்பதற்காகவா  (இங்கு)   வந்தேன்;  ஒருநான் - ஒருவனாகிய நான்;
வல்லே உளராயின மானுடரைக் கொல்லேன் - விரைவாக உயிருடன்
உளராகிய மனிதர்களைக்  கொல்லாதவனும்;  உயிர்  கோள் நெறியில்
செல்லேன்   எனின்
  -  அவர்களது  உயிரைக்  கொள்ளுவதற்குரிய
வழியில்  செல்லாதவனும் (ஆனேன்) எனின்; இவ் இடர் தீர்குவெனோ
- இந்தத் துன்பத்தை விட்டு நீங்குவேனோ?

எல்லே     -  அந்தோ,  இரக்கக்  குறிப்பிடைச்  சொல்.  "எல்லே
இளங்கிளியே  இன்னம்  உறங்குதியோ"  என்று திருப்பாவைப்  பாடல்
கூறுதல்   காண்க.   காணிய   -   செய்யிய   என்னும்   வாய்பாட்டு
வினையெச்கம். கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

                                                  (30)