9099. | ‘முந்தை நாள், உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் தந்தையார் தந்தையாரைச் செருவிடைச் சாயத் தள்ளி, கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒரு கைக் கொண்ட எந்தையார் அரசு செய்வது, இப் பெரும் பலம் கொண்டேயோ? |
முந்தைநாள், உலகம் தந்த மூத்தவானோர்கட்கு எல்லாம் தந்தையார் - முற்காலத்தில் உலகங்களைப் படைத்தவரும், (யாவருக்கும்) மூத்தவரும், தேவர்களுக்கெல்லாம் தந்தையாரும் ஆகிய பிரமதேவரின்; தந்தையாரைச் செருவிடைச் சாயத்தள்ளி - தந்தையாராகிய திருமாலைப் போரிலே தளர்ந்து வீழும்படி தள்ளி; கந்தனார் தந்தையாரைக் கயிலையோடு ஒருகைக் கொண்ட - கந்தக் கடவுளின் தந்தையாகிய ‘சிவபெருமானைக் கயிலாய மலையுடன் ஒரு கையிற் பெயர்த்தெடுத்துக்கொண்ட; எந்தையார் அரசு செய்வது, இப்பெரும் பலம் கொண்டேயோ? - என் தந்தையாராகிய இராவணனார் (இவ்வுலகினை) ஆட்சி புரிவது (நீ சரண்புகுந்துள்ள மனிதரின்) இப் பெரிய வலிமையினைத் துணையாகக் கொண்டுதானோ? |