பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 877

நிலவு தோன்றுமாறும், இருபது  தோள்களும்  குலுங்குமாறும்   சிரித்து;
ஐய!   போர்க்கு  இனி   ஒழிதி போலாம்? - ஐயனே! போருக்குச்
செல்லாமல்  இனி  நீங்குகின்றாய்  போலும்?  மயங்கினை,  மனிசன்
தன்னை  அஞ்சினை, வருந்தல்
- மனம் கலங்கியவனே! மனிசனைக்
கண்டு அஞ்சி வருந்தாதே! இன்றே தனு ஒன்றாலே மனிசரைச் சயம்
கொடு தருவேன்
 -  இன்றைக்கே  என்  ஒரு  வில்லாலே மனிதரை
வெற்றி கொண்டு தருவேன்!
 

ஒரு     சிறந்த வீரன் தான் உணர்ந்த உண்மையை சிரத்தையோடு
சொல்லும்போது    அதைக்   கேட்பவன்   ஏளனமாகச்   சிரிப்பதும்,
அவனுடைய    தன்மானத்திற்கு   இழுக்காகப்   பேசுதலும்   அவன்
உள்ளத்தைப்    புண்படுத்துவதாகும்.   இராவணன்  வேண்டுமென்றே
கும்பகர்ணனிடத்தும்,   இங்கு இந்திரசித்தனிடத்தும் அவ்விதம் நடந்து
கொள்ளுதலைக்    காணலாம்.   அதற்குக்   கராணம்   ஒரு   வீரன்
எவ்விடத்தும்,   எவ்விதத்தும்  மனத்  தளர்ச்சி உடையனாதல் கூடாது
என்பதாம்.   முதல் நாள்போர் முடிவிலேயே “நாசம் வந்துற்ற போதும்
நல்லதோர்   பகையைப்  பெற்றேன்“ என ஒரு முடிவுக்கு வந்து விட்ட
இராவணனுக்கு  இவர்கள் கூறுவதெல்லாம் தெரியாதவை அல்ல. இந்தப்
பின்னணி   இனி   வரும்  இராவணன்  பேச்சைப்  புரிந்து  கொள்ள
உதவும்.
 

                                                   (7)
 

9123.

‘முன்னையோர், இறந்தார் எல்லாம், இப் பகை 
                                முடிப்பர் என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்றனர் பெயர்வர் 
                                        என்றும்,
உன்னை, “நீ அவரை வென்று தருதி“ என்று 
                            உணர்ந்தும், அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் 
                                    கொண்டேன்.
 

முன்னையோர், இறந்தார் எல்லாம், இப்பகை முடிப்பர் என்றும்
- (யான்   இந்த   நெடும்   பகையைத்   தேடிக்கொண்டது)  முன்னே
போருக்குச்    சென்றவராய்  இறந்தவர்கள்  எல்லாம்  இந்தப் பகையை
முடித்து விடுவார்கள்  என்றோ; பின்னையோர், நின்றோர்  எல்லாம்
வென்றனர்  பெயர்வர்  என்றும்
-  பின்பு போர் செய்யத்தக்கவராய்
உயிருடன்  நிற்பவரெல்லாம்   அப்பகைவரை வென்று மீள்வர் என்றோ;
உன்னை, ”நீ   அவரை    வென்று   தருதி“ என்று உணர்ந்தும்
அன்றால்
- உன்னைக் குறித்து, நீ அவரை வென்று