| பொன் திண் கழலாய்! நனி போ’ எனலோடு, எற்றும் திரள் தோளவன் ஏகினனால்.
|
மற்றும் - மேலும்; ஒரு தீது இல் மணிப் பணி தந்து - ஒரு குற்றமும் இல்லாத மணிகள் பதிக்கப்பட்ட அணிகலன்களைக் கொடுத்து; உன் நினைவு யாவையும் உற்று உந்துவெனால் - நீ வேண்டி நினைக்கும் (பொருள்கள்) எல்லாவற்றையும் பொருந்தக் கொடுப்போன்; பொன் திண் கழலாய் - பொன்னில் ஆகிய வலிய வீரக்கழல் அணிந்தவனே (மயிடனே); நனிபோ எனலோடு - விரைந்து போ என்று அதிகாயன் கூறியவுடன்; எற்றும் திரள் தோளவன் ஏகினனால் - (பகைவரைத்) தாக்கும் திரண்ட தோள்களையுடையவனான மயிடன் செல்லலானான்.
|
பணி - அணிகலன், எற்றுதல் - தாக்குதல்.
|
(44)
|
மயிடன் வானரரால் பற்றப் படல்
|
7771. | ஏகி, தனி சென்று, எதிர் எய்தலுறும் காகுத்தனை எய்திய காலையின்வாய், வேகத்தொடு வீரர் விசைத்து எழலும், ‘ஓகைப் பொருள் உண்டு’ என, ஓதினனால்.
|
தனி சென்று ஏகி - (மயிடன்) தனியே சென்று போய்; எதிர் எய்தலுறும் காகுத்தனை - தன் முன்பு சேர்ந்த இராமனை; எய்திய காலையின் வாய் - அடைந்த அப்பொழுதில்; வீரர் வேகத்தொடு விசைத்து எழலும் - (வானர) வீரர்கள் சினம் கொண்டு வேகமாக (அவனைப் பற்ற) எழுந்தபோது; ஓகைப் பொருள் உண்டு என ஓதினனால் - (அந்த மயிடன்) (உங்களுக்கு) மகிழ்ச்சிச் செய்தி ஒன்று உண்டு எனக் கூறினான்.
|
ஓகைப் பொருள் உண்டு என இராமன் வானர வீரரைப் பார்த்துக் கூறுவதாகக் கொள்வாரும் உளர். பற்றப்பட்ட மயிடன் அவர்களால் தனக்கு இடையூறு வரக்கூடாது என எண்ணி இவ்வாறு கூறினான் எனக் கொள்ளலே பொருந்தும். மேலும் தூதுவனாக வந்தவன் தனக்கு ஏற்பட இருந்த துன்பத்தைத் தன் பேச்சாற்றலால் வென்றான் எனக் கொள்ளலாம். 47 ஆம் பாடலில் இராமன் "என் வந்த குறிப்பு" என வினவுவதாக வருதலால் இதை மயிடன் கூற்றாகக் கொள்ளலே நேரிது என்க. ஓகைப்பொருள் - மகிழ்ச்சிச் செய்தி.
|
(45) |