படுகிலேன் - இறந்து பட்டேன் என்றாலும் எளிமையாக இறந்து பட மாட்டேன் (பலரையும் கொன்றே இறப்பேன்) | இங்கு, “ஆசை தான் அச்சீதை பால் விடுதியாயின் என்ற இந்திரசித்தனுக்கு விடை கூறுகின்றான் தந்தை, எட்டினோடு இரண்டுமான திசை - எட்டும் இரண்டும் சேர்ந்த பத்துத் திசை. | (11) | 9127. | ‘சொல்லி என், பலவும்? நீ நின் இருக்கையைத் தொடர்ந்து, தோளில் புல்லிய பகழி வாங்கி, போர்த் தொழில் சிரமம் போக்கி, எல்லியும் கழித்தி’ என்னா, எழுந்தனன்; எழுந்து, பேழ் வாய், வல்லியம் முனிந்தாலன்னான், ‘வருக, தேர் தருக!’ என்றான். | பலவும் சொல்லி என் நீ நின் இருக்கையைத் தொடர்ந்து - ‘பலவும்’ சொல்லிப் பயனென்ன? நீ நின் இருப்பிடத்தை அடைந்து; தோளில் புல்லிய பகழி வாங்கி, போர்த்தொழில் சிரமம் போக்கி - தோளில் அழுந்திய அம்புகளை எல்லாம் நீக்கிவிட்டு, போர்த் தொழிலினால் உண்டான துன்பத்தைப் போக்கிக் கொண்டு; எல்லியும் கழித்தி என்னா, எழுந்தனன், எழுந்து - இந்த இரவு முழுமையும் கழிப்பாயாக என்று விட்டு எழுந்தனன் எழுந்து; பேழ்வாய் வல்லியம் முனிந்தாலன்னான், வருக தேர் தருக என்றான் - பிளந்த வாயினை உடைய புலி வெகுண்டாற் போன்றவனாய், இங்கு வருக என் தேரைக் கொணர்க என்று (தன் தோர்ப்பாகனை நோக்கிக்) கூறினான். | புல்லிய - அழுந்திய, பகழி - அம்பு. எல்லி - இரவு. வல்லியம் - புலி. இந்திரசித்தன் போர்த்தொழிலால் ஏற்பட்ட சிரமத்தால் இங்ஙனம் பேசுவதாகக் கொண்டு இவ்வாறு கூறினான் என்க. “சீதையை விடாது மானத்தோடு இறந்து போதல் என் உளக் கிடக்கை இறப்பதற்கு நீயும் போ“ எனக் கூற முடியுமா? அதற்குப் பதிலாக, “சொல்லியென் பலவும்? சிரமம் போக்கி எல்லியும் கழித்தி“ எனக்கூறி, “யாரவன் இங்கு வருக“ எனது தேர் தருக“ என ஆணையிட்டான் என்பதை இராவணன் உணர்வான். இதே உத்தியைக் கும்பகர்ணனிடம் கையாண்டமையைக் காணலாம். “அஞ்சினை, வெறுவிது உன் வீரம்“ (கம்ப 7361) “கண் முகிழ்த்து இரவும் எல்லியும் உறங்குதி போய்“ (7362) தருக என் தேர் படை, சாற்று, என் கூற்றையும் (கம்ப 7364) என்பன காண்க. | (12) |
|
|
|