9144. | துள்ளு பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி, அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக, வள்ளல்மேல், அனுமன்தன்மேல், மற்றையோர் மல் திண் தோள்மேல், உள்ளுறப் பகழி தூவி, ஆர்த்தனன், எவரும் உட்க, | துள்ளு பாய் புரவித் தேரும் முறை முறை தானே தூண்டி - (இந்திரசித்து) துள்ளுதலோடு பாய்ந்து செல்லுகின்ற குதிரைகளைப் பூட்டியுள்ள தேரையும் தானே முறை முறையாகத் தூண்டிக்கொண்டே; தன்பேர் ஆகமே ஆவம் ஆக அள்ளினன் பறிக்கும் பகழி-தனது பெரிய மார்பகமே அம்பறாத் தூணியாகக் கொண்டு கையால் பற்றிப் பறித்த அம்புகளை; வள்ளல் மேல் அனுமன் தன் மேல், மற்றையோர் மல்திண் தோள்மேல் - இலக்குவன் மேலும், அனுமன் மேலும், மற்றையோர் தம் மல்தொழில் பயின்ற தோள்கள் மேலும்; உள்ளுறத் தூவி எவரும் உட்க ஆர்த்தனன் -அழுந்துமாறு தூவிவிட்டு யாவரும் அஞ்சுமாறு ஆரவாரித்தான். | (29) | இந்திரசித்தின் வீரம் கண்டு தேவரும் இலக்குவனும் வியத்தல் | 9145. | ‘வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்; பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே? சூரர் என்று உரைக்கற்பாலார், துஞ்சும் போது உணர்வின் சோராத் தீரர்’ என்று அமரர் செப்பி, சிந்தினார், தெய்வப் பொற் பூ. | வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன்-“இவன் வீரர் என்று புகழப்படுவோர்கட்கு எல்லாம் முன் நிற்பதற்குரிய வீரர் வீரன்; பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே?- வீரத்தில் பேர் பெற்றவர்கள் ஆதற்குரிய தன்மை இத்தன்மையதே ஆகும்; சூரர் என்று உரைக்கற்பாலார் துஞ்சும் போது உணர்வின் சோராத் தீரர் - சூரர் என்று சிறப்பித்துக் கூறத்தக்கவர்கள் இறக்கும் போது வீர உணர்ச்சியில் சோர்வடையாத |
|
|
|