பக்கம் எண் :

 இந்திரசித்து வதைப் படலம் 909

9172.வரம் தரு முதல்வன், மற்றை மான் மறிக் கரத்து வள்ளல்
புரந்தரன், முதல்வர் ஆய நான்மறைப் புலவர், பாரில்
நிரந்தரம் தோன்றி நின்றார்; அருளினால் நிறைந்த நெஞ்சர்
கரந்திலர்; அவரை யாக்கை கண்டன, குரங்கும் கண்ணால்.

 

வருந்தரு முதல்வன்  மற்றை  மான்மறிக்கரத்து  வள்ளல் -
வரங்களைத்   தருகின்ற   முதற்கடவுளாகிய   திருமாலும்,   மற்றும்
மான்குட்டியைக்  கையிற்கொண்ட  வள்ளலாகிய  சிவனும்; புரந்தரன்,
முதல்வர்   ஆய   நான் மறைப்புலவர்
 - இந்திரன்,  இவர்களைத்
தலைவர்களாகக்  கொண்ட நான்கு மறைகளையும்  அறிந்த தேவர்கள்,
(ஆகியோர்); பாரில் நிரந்தரம் தோன்றி  நின்றார்- பூமியில் வந்து
நிரந்தரமாகத் தோற்றம் அளித்து நின்றார்கள்; அருளினால் நிறைந்த
நெஞ்சர்   கரந்திலர்  அவரை
- அருளினால்  நிறைந்த  நெஞ்சர்
ஆதலினால்  அவர்தம்  உருவை  மறைக்காமல்  நின்றனர்; குரங்கும்
கண்ணால் யாக்கை கண்டன
-குரங்குகளும் தம் கண்களால் அவர்தம்
உடம்பைக் கண்டன.
 

                                                (57)
 

9173.‘அறம்தலை  நின்றார்க்கு  இல்லை  அழிவு’ எனும் அறிஞர்
                                         வார்த்தை
சிறந்தது-சரங்கள் பாயச் சிந்திய சிரத்த ஆகி,
பறந்தலைஅதனில் மற்று அப் பாதக அரக்கன் கொல்ல,
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன, இமையோர் ஏத்த.
 

‘அறந்தலை   நின்றார்க்கு  இல்லை  அழிவு’ எனும் அறிஞர்
வார்த்தை சிறந்தது
  -    ‘அறவழியில்    நின்றவர்க்கு   இல்லை
அழிவு’  என்ற    அறிஞரின்   மொழி (உண்மையாய்ச்)  சிறப்புற்றது;
(எங்ஙனம் எனின்?) சரங்கள்    பாயச்   சிந்திய  சிரத்த   ஆகி
- அம்புகள் பாய்ந்ததனால்  சிதறப்பெற்ற  தலையினவாகி;  புறந்தலை
அதனில் மற்று அப்பாதக  அரக்கன்  கொல்ல
-  போர்க்களத்தில்
அந்தப்   பாதக  அரக்கனாகிய   இந்திரசித்தினால்    கொல்லப்பட்டு;
இறந்தன    கவிகள்    எல்லாம்  இமையோர் ஏத்த எழுந்தன-
இறந்தனவாகிய