தோளாகிய மலையினை நோக்குவான்; நின்ற மாருதி வலியை நோக்கும் - பின்பு அவனுக்கு ஊர்தியாக இருந்த அனுமனது வலிமையை நோக்குவான்; சிலையினை நோக்கும்; தேவர் செய்கையை நோக்கும் - பின்பு (இலக்குவன் கையிலுள்ள) வில்லின் சிறப்பினை நோக்குவான் (இந்திரசித்தன் வீழ்ச்சிகண்டு தூசு வீசி ஆரவாரிக்கும்) தேவர்களுடைய செயல்களை நோக்குவான்; செய்த கொலையினை நோக்கும் - (அங்ஙனம் தேவர்களும் மகிழுமாறு) இலக்குவன் செய்த கொலையின் சிறப்பை நோக்குவான். |
உவகை மிகுந்ததால் பேச்சுத் தோன்றாது என்பார். “களிப்புக் கொண்டான் ஒன்றும் உரைத்திலன்” என்றார். வெற்றி பெற்ற தோள் ஆதலின், ‘கொற்றவை தழீஇய பொற்றோள்’ எனச் சிறப்பிக்கப்பட்டது. |
(66) |
9182 | காள மேகத்தைச் செக்கர் கலந்தென, கரிய குன்றில் நாள் வெயில் பரந்தது என்ன, நம்பிதன் தம்பி மார்பில் தோளின்மேல் உதிரச் செங் கேழ்ச் சுவடு தன் உருவில் தோன்ற, தாளின்மேல் வணங்கினானைத் தழுவினன், தனித்து ஒன்று இல்லான். |
தனித்து ஒன்றில்லான் நம்பி- (இலக்குவனை யன்றித் தனக்கெனத்) தனித்து ஒன்றும் இல்லாதவனாகிய இராமன்; தன் தம்பி மார்பில் தோளின் மேல் உதிரச் செங்கேழ்ச் சுவடு தன் உருவில்-தன் தம்பி இலக்குவன் மார்பிலும் தோளின் மேலும் இருந்த குருதியின் செந்நிறமுடைய சுவடுகள் தன் உருவத்தில்; காளமேகத்தைச் செக்கர் கலந்தென- கரிய மேகத்தைச் செவ்வானம் கலந்தாற்போலவும்; கரியகுன்றில் நாள்வெயில் பரந்து என்ன தோன்ற- கரிய குன்றத்தில் காலை வெயில் பரவியது போலவும் தோன்றுமாறு; தாளின் மேல் வணங்கினானைத் தழுவினான் - தன் திருவிடி மேல் வணங்கிய அத்தம்பியைத் தழுவிக் கொண்டான். |
இன்ப துன்பங்களில் இலக்குவனையன்றித் தனக்கென ஒன்றும் இல்லாதவன் இராமன் என்பதனை “தனித்து ஒன்றில்லான் நம்பி” எனக் |