பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 93

-  இந்த இல்ககுவனே வில்லாளியான  (அதிகாயனுடன்)  போர்  செய்ய
வேண்டும்  என்று,;  நாரணன்  முன் சொல்லாடினன் - நாராயணனின்
அவதாரமாகிய   இராமபிரானிடம்   (அந்த  அதிகாயனைப்  பற்றிய)
செய்திகளைத்  கூறினான்;  அன்னவை  சொல்லுதுமால் - அவற்றைச்
சொல்லுவோம்.
 

நல்லாறு - நல்ல அறவழி. பண்புத்தொகை.
 

                                                  (54)
 

7781.‘வார் ஏறு கழற் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா,
தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண்
கார் ஏறு என வந்த கதத் தொழிலோன்.
 

வார்     ஏறு கழற்சின வாள் அரி - (இவ்வதிகாயன்) கச்சினால்
கட்டப்பட்ட  வீரக்  கழல்  அணிந்த  சினங்கொண்ட  கொடிய ஆண்
சிங்கம் போன்றவனாகிய;   எம்  போர்  ஏறொடு  போர்  புரிவான்
அமையா
 -  போரில்  வல்ல  எம் இலக்குவனோடு போர் புரிவதற்கு
உடன்பட்டுத்; தேர் ஏறு சினக் கடு வெந் தறுகண் - தேரில் ஏறி வந்த
சினமும்  கொடிய அஞ்சாமையும் கொண்ட; கார் ஏறு என வந்த கதத்
தொழிலோன்
- கரிய மேகம் என்னுமாறு வந்த சினம் மிக்க தொழிலை
உடையவன்.
 

வார்   ஏறு - கச்சினால் கட்டப்பட்ட, அரி - சிங்கம், தறுகண்மை -
அஞ்சாமை, கதம் - சினம். அமையா - செய்யா என்னும் வாய்பாட்டு
வினையெச்சம். தொழிலோன் - வினையாலணையும் பெயர்.
 

                                                  (55)
 

7782.‘ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்,
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்,
சாவான் இறையும், சலியா வலியான்,
மூவா முதல் நான்முகனார் மொழியால்.
 

ஓவா   நெடு  மாதவம்  ஒன்று  உடையான்  -  நீங்காத  மிகப்
பெருந்தவம்   ஒன்று   உடையவன்;   மூவா   முதல்  நான்முகனார்
மொழியால்
 -  கெடாத  முதற்பொருளாகிய  பிரமன் தந்த வரத்தால்;
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் - தேவாசுரர் முதலியோர் செய்த
போரில்;சாவான் - சாவாமல்; இறையும் சலியா வலியான் - சிறிது கூட
சலிப்படையாத வலி பெற்றவன்.