| சூழிக் கரி தள்ளுதல் தோள் வலியோ? ஆழிக் கிரி தள்ளும், ஓர் அங்கையினால்; |
ஊழிக்கும் ஒருவா உயர்ந்து - ஊழிக்காலத்திலும் அழியாமல் மேம்பட்டு உயர்ந்து; ஒருநாள் பாழித் திசை நின்று சுமந்த - ஒருநாளும் (நீங்காமல்) வலிய திசைகளில் நின்று சுமந்த; பணைச் சூழிக்கரி தள்ளுதல் தோள் வலியோ - பருத்த முகபடாம் அணிந்த திசை யானைகளைத் தள்ளுதல் தோள் வலிமையாகுமா? ஓர் அங்கையினால் ஆழிக்கிரி தள்ளும் - (இவ்வதிகாயன்) ஒப்பற்ற தன் உள்ளங்கையினால் சக்கரவாள மலையையும் தள்ளி விடுவான். |
ஒருவாமல் - அழியாமல் பாழி - வலிமை, சூழி - முகபடாம். ஆழிக்கிரி - சக்கரவாள மலை. பாழித்திசை - பண்புத்தொகை. |
(59) |
| 7786. | ‘காலங்கள் கணக்கு இற, கண் இமையா ஆலம் கொள் மிடற்றவன், ஆர் அழல்வாய் வேல் அங்கு எறிய, கொடு, ‘விட்டது நீள் சூலம்கொல்?’ எனப் பகர் சொல் உடையான்; |
கணக்கு இற காலங்கள்கண் இமையா - கணக்கற்ற காலங்கள் கண் இமைத்தல் இல்லாத; ஆலம்கொள் மிடற்றவன் - ஆலகால நஞ்சைக் கழுத்தில் கொண்ட (நீலகண்டனாகிய) சிலபிரான்; ஆர் அழல் வாய் வேல் அங்கு எறிய - நிறைந்த நெருப்பு பொருந்திய வேலினை (போரில் இவ்வதிகாயன் மீது) எறிந்த பொழுது; கொடு விட்டது நீள் சூலம் கொல் என - (அதனைக் கையில் பற்றிக்) கொண்டு (நீ) விட்டது (இந்த) நீண்ட சூலம் போலும் என்று; பகர் சொல் உடையான் - செல்லுகின்ற சொல்லை உடையவன். |
ஆலம் கொள்மிடற்றவன் - சிவபிரான். பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய நஞ்சினை உண்டு அமரர்களைக் காத்தவன், "விண்ணோர் அமுதுண்டும் சாவ நீ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டும் இருந்தருள் செய்குவாய்" என்பர் இளங்கோவடிகள். கொடு - கையில் பற்றிக்கொண்டு, |
(60) |
| 7787. | பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் புகை ஆடிய நாள், புனை வாகையினான், "மிகை ஆர் உயிர் உண்" என வீசிய வெந் தகை ஆழி தகைந்த தனுத் தொழிலான்; |