பக்கம் எண் :

176யுத்த காண்டம் 

வல்லவர்கள்;  அவர்    மெய்ம்மை வழங்க   வ(ல்)லார்-
அவர்கள் செம்மையான முறையில் (படைக்கலங்களைச்) செலுத்த
வல்லவர்கள்; எல்லா உலகங்களும் ஏறிய போர் வில்லாளர்-
அனைத்து உலகங்களிலும் சிறப்பால் ஓங்கிய போரில் வில்லை
ஆளும் திறம் உடையவர்கள்.
 

(189)
 

9488.

வென்றார், உலகங்களை, விண்ணவரோடு
ஒன்றா உயர் தானவர் யூகம் எலாம்;
கொன்றார் நிமிர் கூற்று என, எவ் உயிரும்
தின்றார்;- எதிர் சென்று, செறிந்தனரால்.
 

உலகங்களை- உலகங்களோடு; விண்ணவரோடு ஒன்றா உயர்
தானவர் யூகம் எலாம்  
- தேவர்களோடு இசைந்து    வாழாமல்
உயர்ந்த தானவர்களின்   சேனை அணிகளையெல்லாம்; வென்றார்
- வென்றார்கள்;   நிமிர் கூற்று     என- (தோல்வி அறியாமல்)
ஓங்கி நிற்கும் கூற்றுவனைப் போல; எவ் உயிரும் தின்றார் - எல்லா
உயிர்களையும் தின்றவராய்; எதிர் சென்று செறிந்தனர்- எதிராகச்
சென்று குழுமினார்கள்.
 

தானவர் - அரக்கரில் ஓர் இனம்.
 

(190)
 

9489.

வளைத்தார் மத யானையை, வன் தொழுவில்
தளைத்தார் என வந்து, தனித் தனியே
உளைத்தார் உரும்ஏறு என; ஒன்று அல போர்
விளைத்தார்; இமையோர்கள் வெதும்பினரால்.
 

மத யானையை வளைத்தார்- மதங்கொண்ட யானைகளை
வளைத்தவர்களாய்; வன் தொழுவில் தளைத்தார் என வந்து-
வலிய தொழுவத்திலே   கட்டி   வைத்தவர்   போல   வந்து;
தனித்தனியே உறும் ஏறு என உளைத்தார் - தனித்தனியாகப்
பேரிடி போல    ஆரவாரித்தனர்; ஒன்று    அல பல போர்
விளைத்தார்
- ஒரு வகைப்பட்டதாக அல்லாமல் பல வகையான
போர்களைச் செய்தார்கள்;  இமையோர்கள்  வெதும்பினர்-
தேவர்கள் (அதுகண்டு) வெதும்பினார்கள்.
 

(191)
 

9490.

விட்டீய வழங்கிய வெம் படையின்
சுட்டீய நிமிர்ந்த சுடர்ச் சுடரும்