பக்கம் எண் :

 மூலபல வதைப் படலம்183

9506.

நின்றாருடன் நின்று, நிமிர்ந்து அயலே
சென்றார் எதிர் சென்று, சிதைத்திடலால்,
'தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர்
கொன்றான் அவனே இவன்' என்று கொள்வார்.
 

நின்றாருடன் நின்று- தன்னை எதிர்த்து நின்றவர்களுடன்
எதிர்த்து நின்றும்; நிமிர்ந்து- மேலோங்கி; அயலே சென்றார்
எதிர் சென்று
- பக்கத்தே சென்றார்க்கும் எதிரே சென்றும்;
சிதைத்திடலால்- கொல்லுவதால்; ஓர்வு உறு தன் மகன் நேர்
- ஞானத்தால் உணர்வுறுகின்ற தன் மகனுக்கு முன்பாகவே; தன்
தாதையைக் கொன்றான் அவனே இவன்
- தன் தந்தையைக்
கொன்றவனாகிய அந்த நரசிங்கனே இவன்; என்று கொள்வார்
- என அரக்கர்கள் இராமனைப் பற்றிக் கருதினார்கள்.
 

(208)
 

9507.

'இங்கே உளன்; இங்கு உளன்; இங்கு உளன்' என்று
அங்கே உணர்கின்ற அலந்தலைவாய்,
வெங் கோப நெடும் படை வெஞ் சரம் விட்டு
எங்கேனும் வழங்குவர், ஏகுவரால்.
 

இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று-
(இராமபிரான் விரைவாகச் சாரி சுழன்று இலங்குவதால், அவன்
எங்கும்  இருப்பவனாய்த் தோற்றம்   அளித்தான் அதனால்
இராமன் இங்கே இருக்கிறான் இதோ இருக்கிறான், இங்குத்தான்
இருக்கிறான் என்று); அங்கே உணர்கின்ற அலந்தலைவாய்-
அங்கங்கே இருப்பவனாக உணர்கின்ற கலக்கத்தால்; வெங்
கோப நெடும்படை
- கொடிய கோபத்தால் பயன்படுத்துகின்ற
நெடிய வில்லாகிய படைக்கலத்திலிருந்து; வெஞ்சரம் விட்டு-
கொடிய அம்புகளை எய்து; எங்கேனும் வழங்குவர்- எந்தத்
திசையிலும் வழங்கினராய்; ஏகுவர்- (அத்திசையிலே இராமனைத்
தாக்க முடியாமல் வேறு பக்கம்) போவார்கள்.
 

(209)
 

9508.

ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார்,
'இரவு அன்று இது; ஓர் பகல்' என்பர்களால்;
'கரவு அன்று இது; இராமர் கணக்கு இலரால்;
பரவை மணலின் பலர்' என்பர்களால்.