இராவணனின் வலிமையோடு போர் செய்வது அரிது. அவனோடு போரிட்டு மடிவதே நல்லது என்ற துணிவோடு வானரப் படைகள் போரிட்டன. தன் அரக்கர் சேனை வலி குன்றக் கண்டு கடுமையான கணைகளை ஏவ வானரசேனை நிலைகுலைகிறது. அது கண்டு 'அஞ்சற்க' என இலக்குவன் வருகிறான். அவன் பேராற்றலைக் கண்ட இராவணன் 'இவனை அம்பு எய்து வெல்லுதல் அரிது என மோகன மந்திரமிட்டு ஏவுகிறான். வடிவற்ற அதனை இலக்குவன், வீடணன் உரை கேட்டு நாரணன் கணையை விட்டுத் தவிர்க்கிறான். தன் செயலுக்கு வீடணன் தடை எனக் கண்டு அவன் மீது தன்னிடம் மயன் தந்த வேலை எய்கிறான். அதை எதிர்த்து இலக்குவன் விட்ட கணைகள், பயனற்றுப் போயின. அதை ஏற்கத்தானே முன்வர வீடணன் முந்த அவர்களை அங்கதன், சுக்ரீவன், அனுமன் முந்துகின்றனர். எனினும் அடைக்கலம் தந்தவனைக் காத்தல் தன் கடன் என இலக்குவன் தன் மார்பிலேற்று வீழ்கிறான். |