பக்கம் எண் :

268யுத்த காண்டம் 

9665.

அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி,
இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர்

எவர்க்கும்

வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் 

வெறுக்கை

நினையின் நீண்டதுஓர் பெருங் கொடை அருங்

கடன் நேர்ந்தான்

 

அனைய  தேரினை  -  அப்படிப்பட்ட தேரை; அருச்சனை
வரன் முறை ஆற்றி
  -  போற்றித் துதிப்பதை முறையாகச் செய்து;
இனையர் என்பது ஓர் கணக்கு இலா  - இவ்வளவு பேர் என்ற
ஒரு  கணக்கு  இல்லாத; மறையவர்  எவர்க்கும்  -  வேதியவர்
எவர்க்கும்; வினையின் நல் நிதி முதலிய அளப்பரும்- அளிக்க
வேண்டியவாறு நல்ல பொருள் முதலியவற்றை அளப்பதற்கு முடியாத;
வெறுக்கை - செல்வங்களை; நினையின் - நினைக்க முடியாதவாறு;
நீண்டதுஓர்   பெருங்கொடை   -   மிக்க   ஒப்பற்ற   பெரிய
செல்வத்தை அளிப்பதாக;   அருங்கடன் நேர்ந்தான்   -  அரிய
கடமையைச் செய்து நிறைவேற்றினான். 
 

(24)
 

9666.

ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர்
தேறினார்களும் தியங்கினார், மயங்கினார்,

திகைத்தார்;

வேறு நாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் 

புலனும்

ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க.
 

தொழுது ஏறினான்- (அந்தத் தேரை இராவணன்) வணங்கி
ஏறினான்;   இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும்
தியங்கினார் 
 -  இந்திரன்    முதலான  தேவர்களும் அறிவு
சோர்ந்து;    மயங்கினார்  திகைத்தார்   -    மயங்கினராய்
திகைப்படைந்தனர்;   வேறு  நாம்  செயும் வினை இலை -
வேறாகச்  செய்கின்ற   செயல்   இல்லாமையால்;   மெய்யின்
ஐம்புலனும்
 - உடலிலுள்ள ஐந்து புலன்களும்; ஆறினார்களும்
- அடங்கப் பெற்ற   முனிவர்களும்; உலகு எலாம்   அனுங்க
அஞ்சினர்
- உலகங்கள் எல்லாம் வருந்த பயப்பட்டனர். 
 

(25)