பக்கம் எண் :

274யுத்த காண்டம் 

35.இராமன் தேர் ஏறு படலம்
 

சிவபெருமான் ஏவ, இந்திரன் தேர் அனுப்பினான்; அவனுடைய
தேரோட்டியாகிய   மாதலி   தேர்   கொண்டு   வந்தான். தேரின்
சிறப்பைக்   கவிக்கூற்றால்   உணர்கிறோம். அரக்கர்   மாயையால் 
வந்த  தேரோ  என   முதலில்   இராமன்  ஐயப்பட்டான். பின்னர்
உண்மை  தெரிந்து, தேவர் அனுப்பிய  தேரில் ஏறினான் பெருமான்.
இவை இப்படலம் கூறும் செய்திகள்.
 

இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்
 

சந்தக் கலிவிருத்தம்
 

9677.

தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை

துளங்கி,

விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர்
அழுந்து படு பால் அமளி, 'அஞ்சல்' என, அந் நாள்,
எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன்.
 

முறை  -  முறையே;  தொழும் கையொடு  -  (இராவணன் 
வருவதைக்  கண்டு  அஞ்சிய  வானரர்கள்  இராமனை  நோக்கி)
வணங்கிய கைகளோடு; வாய் குழறி - அச்சத்தால் பேச்சுக் குழறி;
மெய் துளங்கி - உடம்பு  நடுங்க; கவிசேனை  - வானர சேனை;
விழுந்து   இடு பூசல் மிக  -   நிலத்திலே   தடுமாறி  விழுந்து
எழுப்புகின்ற பேரொலி பெருகிட; இராமன்- அந்த  ஆரவாரத்தைக் 
கேட்ட   இராமன்;  விண்ணோர்  அழுந்து  படு பால் அமளி 
அந்நாள்
  - (முன்பொரு   காலத்திலே) தேவர்கள்   துன்பத்தில் 
அழுந்திய போது எழுப்பிய ஆரவாரத்தைக் கேட்ட திருப்பாற்கடலில்
இருந்த   அந்தக் காலத்தில்; 'அஞ்சல்'   என   எழுந்தபடியே-
(தேவர்களைப்   பார்த்து)   'அஞ்சாதீர்கள்' என   அபயம்   கூறி
எழுந்தருளியது போலவே; கடிது- விரைவாக; எழுந்தனன்- (வானர
சேனை அச்சம் தவிருமாறு) இராமபிரான் எழுந்தான். 
 

(1)