என்று வினவினான்; அன்னவனும் - அந்த மாதலியும்; அன்னதனை ஆக உரை செய்தான் - இராமனை கேட்ட செய்தியைப் பொருந்துமாறு சொன்னான். |
(18) |
மாதலி விடை |
9695. | 'முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள், |
| அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு |
| ஒப்பு உடையது; ஊழி திரிகாறும் உலைவு இல்லா |
| இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது; - எந்தாய்! |
|
'எந்தாய் - என் தந்தையே!; முப்புரம் எரித்தவனும் - திரிபுரம் எரித்த சிவபெருமானும்; நான்முகனும் - பிரமனும்; முன் நாள் அப் பகல் - முதல் நாளாகிய படைப்புக் காலத்தில்; இயற்றி உளது - செய்தது (இத்தேர்); ஆயிரம் அருக்கர்க்கு ஒப்பு உடையது - தன் ஒளிச் சிறப்பால் ஆயிரம் சூரியர்களுக்கு நிகரானது; ஊழி திரிகாறும் உலைவு இல்லா - ஊழிக்காலம் மாறும்போதும் அழிவிலாததாகி; இத்தேர் வருவது - வந்துள்ள இந்தத் தேர்; இந்திரனது- இந்திரனுக்கு உரியது. |
(19) |
9696. | 'அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக் |
| கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை |
| கோளுற்று |
| உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்; |
| புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். |
|
புண்டரிக - (கண், கரம், கால் போன்ற உறுப்புகளால்) தாமரையானே!; இதுபோல்வன அண்டம் அளப்பு இல - இந்த அண்டம் போல அளவற்ற அண்டங்களை; அடுக்கிக் கொண்டு பெயரும் - தன்னிலே அடுக்கிக்கொண்டு இயங்கவல்லது; குறுகும், நீளும்- தேவைப்படும்போது அளவிலே குறுகும் அல்லது நீளும்; உவமிக்கின் அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும் ஒக்கும்- உவமை சொல்ல வேண்டுமாயின் அந்த அண்டங்களை அனைத்தையும் பற்றி உண்டவனாகிய திருமாலின் வயிற்றையும் ஒக்கும்; நின் சரம் எனக் கடிது போம் - உன்னுடைய அம்பு போல் வேகமாகப் போகும். |
(20) |