பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்293

மாதலியிடம் இராமன் கருத்து உரைத்தல்
 

9709.

மாதலி வதனம் நோக்கி, மன்னர்தம் மன்னன்

மைந்தன்,

'காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என்தன்
சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை' என்னச்

சொன்னான்.

 

மன்னர்தம் மன்னன் மைந்தன்- (தசரதச்) சக்கரவர்த்தி
திருக் குமாரனாகிய இராமன்; மாதலி வதனம் நோக்கி - தன்
தேர்ச்சாரதியாகிய     மாதலியின்    முகத்தைப்     பார்த்து;
'காதலால்   கருமம் ஒன்று   கேட்டியால்  -  அன்போடு
நான் கூறும் செயல் ஒன்றினைக் கேட்பாயாக; களித்த சிந்தை
எதலன் 
-   மிதப்பு  மிக்க சிந்தனை கொண்டவனாகிய (நம்)
பகைவன்; மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை -  தன்னுடைய
மீறிய செயல்களையெல்லாம் செய்த பிறகு; என்தன் சோதனை
நோக்கி
   -   என் தூண்டுதலைக் கவனித்து; செய்தி - (உன்
தேரோட்டும்)  தொழிலைச்   செய்வாயாக;   துடிப்பு  இலை
(இப்போது) விரைதல் வேண்டுவதில்லை; என்னச் சொன்னான்-
என்று கூறினான்.
 

இராவணனைக்   கண்டதும்    மாதலி    பால்    ஏற்பட்ட 
பரபரப்பையும் விரைவையும் கவனித்தமையால் இராமன் இவ்வாறு
கூறினான். 'பகைவனின்   ஆர்ப்பாட்ட   மெல்லாம்  முடியட்டும்.
நமக்கு அவசரமில்லை' எனப் பணியாளிடம் உணர்த்திய பாங்கும்,
அவனிடம் 'காதலால்' கருத்துரைக்கும்   பாங்கும் இராமபிரானின்
தலைமைப் பண்பை உணர்த்துகின்றன. 
 

(6)
 

மாதலி மறுமொழி
 

9710.

'வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும்,

மாற்றலார்தம்

உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதிதானும்,
கள்ளம் இல் காலப் பாடும், கருமமும்,

கருதேன்ஆகில்,

தெள்ளிது என் விஞ்சை!' என்றான்; அமலனும்,

'செவ்விது!' என்றான்.