பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்301

கலி விருத்தம்
 

9722.

உதிர மாரி சொரிந்தது, உலகு எலாம்;
அதிர வானம் இடித்தது; அரு வரை
பிதிர வீழ்ந்தது, அசனி; ஒளி பெறாக்
கதிரவன்தனை ஊரும் கலந்ததால்.
 

உலகெலாம்   - உலகு  முழுவதிலும்; உதிரமாரி  - இரத்த
மழை; சொரிந்தது - பொழிந்தது;   வானம் - முகில்கள்; அதிர
இடித்தது
- உலகம் அதிரும்படி இடியொலி எழுப்பின; அருவரை
பிதிர
  - பெருமலைகள்  சிதறும்படி; அசனி - இடி; வீழ்ந்தது -
(மலைகள் மேல்) விழுந்தது; ஒளிபெறாக் கதிரவன் தனை- ஒளி
இழந்த ஞாயிற்றை; ஊர்- ஊர்கோளும்; கலந்தது- சூழ்ந்து
கொண்டது; (ஆல் - அசை)
 

ஊர்கோள்  -  பரி   வேடம்;  பரிவேடம்  கால  அருக்கன்
உதயத்துச்  சாரில்  வட்டந் தலமழிவாம் என்பர் முன்னோர். 
 

(19)
 

9723.

வாவும் வாசிகள் தூங்கின; வாங்கல் இல்
ஏவும் வெஞ் சிலை நாண் இடை இற்றன;
நாவும் வாயும் உலர்ந்தன; நாள்மலர்ப்
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால்.*
 

வாவும்   வாசிகள் - (இராவணன்  தேரில் கட்டிய) பாயும்
குதிரைகள்;  தூங்கின   -  தேரில்    கட்டியவாறே  உறங்கின;
வெஞ்சிலை  - கொடிய விற்கள்; வாங்கலில்- வளைக்கப்பட்ட
போது; ஏவும்  -   அம்புகளும்;   நாண்  இடை  இற்றன -
நாண்கயிற்றில் வைக்கும்போதே    முறிந்து   போயின;  நாவும்
வாயும் உலர்ந்தன
  - (இராவணன்) வாய்களும்   நாக்குகளும்
காய்ந்து    போயின; நாள் மலர்ப் பூவின் மாலை  - புத்தம்
புதிதாக  அன்று   மலர்ந்த   பூக்களால்  கட்டப்பட்ட  மாலை;
புலால் வெறி - மாமிச நாற்றத்தை; பூத்த - தோற்றுவித்தது.
 

(ஆல் - அசை, வாசி - குதிரை, ஏ - அம்பு. 
 

(20)
 

9724.

எழுது வீணை கொடு ஏந்து பதாகைமேல்
கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர்
ஒழுகுகின்றன, ஓடு இகல் ஆடல் மா;
தொழுவில் நின்றன போன்றன, சூழி மா.