பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்307

மேனியில் - குற்றமற்ற இராமபிரான் மேனியில்; தைத்த - தைத்தவை; 
அனந்தம் - கணக்கற்றவையாகும் (ஆல் - அசை).
 

(32)
 

9736.

சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய 

குன்றி வெங் கண் குதிரை குதிப்பன, 

ஒன்றை ஒன்று உற்று, எரி உக நோக்கின; 

தின்று தீர்வன போலும் சினத்தன. 

 

சென்ற -  போர்க்களத்துக்கு வந்த;  தேர் ஓர் இரண்டினும்
இராமபிரான்; இராவணன் ஆகிய  இருவரின் ஒப்பற்ற தேர்களிலும்;   
சேர்த்திய - கட்டப்பட்டிருந்த;   குன்றி வெங்கண்- குன்றிமணி 
போல் சிவந்த கண்களையுடைய;குதிரை- குதிரைகள்; குதிப்பன-  
எதிரெதிர்  பாய்வனவாயும்; ஒன்றை ஒன்று - ஒன்றோடொன்று;  
உற்று- நெருங்கி; எரி உக நோக்கின- நெருப்புச் சிந்தும்படி 
பார்ப்பனவாயும்;  தின்று தீர்வன போலும்- ஒன்றை யொன்று 
கடித்து  விழுங்கி  விடுவன போல;  சினத்தன - கோபம் 
கொண்டனவாயும் (காட்சி தந்தன).
 

(33)
 

9737.

கொடியின்மேல் உறை வீணையும், கொற்ற மா 

இடியின் ஏறும், முறையின் இடித்தன - 

படியும் விண்ணும் பரவையும் பண்பு அற 

முடியும் என்பது ஓர் மூரி முழக்கினால். 

 

கொடியின் மேல் உறை- (இராவணன்) கொடி மீதிலிருந்த; 
வீணையும் -;  கொற்றம்- வெற்றியையுடைய;  மா இடியின் 
ஏறும்
- (இராமபிரான்)  கொடி  மீதிருந்த  இடியேறும்; படியும் 
- பூமியும்; விண்ணும்- வானமும்;பரவையும்- கடலும்; பண்பு 
அற
- தம் இயல்பிற் குன்றி; முடியும்- அழிந்து விடும்; என்பது 
ஓர் மூரி  முழக்கினால்
- என்று கூறத்தக்க  ஆற்றல்  மிக்க 
ஓசையோடு; முறையின் இடித்தன - மாறி மாறி பேரொலி 
எழுப்பின.
 

மானுடத் தலையைக் கொடியில் இராவணன் 
கொண்டிருந்தானென்று முதல் நூல் கூறும் 
(வை.மு.கோ.உரை)
 

(34)
 

9738.

ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம், 

வீழி வெங் கண் இராவணன் வில் ஒலி; 

ஆழி நாதன் சிலை ஒலி, அண்டம் விண்டு 

ஊழி பேர்வுழி, மா மழை ஒத்ததால்.