உள்ளவரையும்; நீண்ட பார் உளதனையும், வானப் பரப்புளதனையும்- நீட்சியை உடைய பூமி உள்ளவரையும், ஆகாயப்பரப்பு உள்ளவரையும்; காலின் பேர் உளதனையும் பேராப் பெரும்பழி பிடித்திபோலாம் - காற்றின் பெயர் உலகில் வழங்கும் வரையிலும், நீங்காத பெரும் பழியைப் பெறுகின்றாய் போலும். |
தனை - அளவு குறிக்கப் பிற சொல்லின் பின் வரும் ஒரு சொல். ''இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்'' (திருவாச - 7, 3) போலும் - உரையசை. |
(56) |
9242. | 'தெள்ள அருங் காலகேயர் சிரத்தொடும், திசைக் |
| கை யானை |
| வெள்ளிய மருப்புச் சிந்த வீசிய விசயத்து ஒள் வாள், |
| வள்ளி அம் மருங்குல், செவ் வாய், மாதர்மேல் |
| வைத்த போது, |
| கொள்ளுமே ஆவி தானே, நாணத்தால் குறைவது |
| அல்லால்? |
|
தெள்ளரும் காலகேயர் சிரத்தொடும்- (இவர் வலிமை எவ்வளவு என்று) தெளிதற்கு அரிய பெருவலி பெற்ற காலகேயர் தலைகளோடு; திசைக்கை யானை வெள்ளிய மருப்புச் சிந்த- திசை யானைகளின் வெள்ளிய கொம்பு சிதற; வீசிய விசயத்து ஒள்வாள் - வீசிய நின் வெற்றியை உடைய ஒள்ளிய வாள்; வள்ளி அம் மருங்குல், செவ்வாய் - கொடி போன்ற இடையினையும் சிவந்த வாயினையும் உடைய; மாதர்மேல் வைத்த போது - பெண் பாலர்மேல் செலுத்தியபோது; நாணத்தால் தானே குறைவது அல்லால் - வெட்கத்தால் அந்த வாள் தன் தொழிலில் குறைவு படுவதல்லாமல்; கொள்ளுமே ஆவி? - அவர் உயிரைக் கொள்ளுமோ? (கொள்ளாது) |
காலகேயர் - காசிபருக்குக் கலை என்பவளிடம் பிறந்த அசுரர். இவர்கள் பொன்னிறமுடையவர்; வலிமை மிக்கவர். இந்திரனை வென்றவர்கள். கடலில் இருந்த இவர்களை இராவணன் வருணனை வெல்லச் செல்லுங்காலத்து வென்றான் என்பது உத்தர காண்டத்தில் உள்ளது. (உத்தர. திக்விசயப் 83) திக்கயங்களை இராவணன் வென்றமையையும் உத்தர காண்டத்தால் (திக்விசயப் 227) அறியலாம். வீரம் விளைத்த வாளைப் பேதைப் பெண் மேல் வீசுவது அவ்வாளுக்கே இழிவைச் சேர்க்கும் செயல் என்பதாம். |
(57) |