பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்407

குலம் என- மேகக் கூட்டங்கள் போல்; சிலர் வான்
வந்தார்
- சில மகளிர் வான்வழியாக வந்தனர்.
 

இராவணன் உடலைக் காண வந்த மகளிர், மேகக் கூட்டங்களாக
உருவகிக்கப்பட்டனர். அவர்கள் கூவும் ஒலியே இடி முழக்கு.
அழகின் ஒளியே மின்னல். ஆபரணங்களே வானவில்.
கண்ணீர்த்தாரைகளே மழைத்தாரைகள் என உருவகிக்கப்
பெற்றுள்ளமை காண்க.
 

(229)
 

9933.

தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரை நீர்

முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்து வந்து 

அலைமிசைக் கடலின் வீழ் அன்னம்போல், அவன் 

மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 

 

தலைமிசைத்  தாங்கிய கரத்தர்-  தலை மேல் சுமந்த
கைகளையுடையவரும்; தாரை நீர்- கண்ணீர்த் தாரைகள்; 
முலை மிசைத்  தூங்கிய  முகத்தர்- முலைமுகட்டில் 
வீழுமாறு தொங்கிய முகங்களையுடையவரும்; மொய்த்துவந்து 
-நெருங்கி வந்து; கடலின் அலைமிசை- கடல் அலைகளின் 
மேல்; வீழ் அன்னம் போல்- (வந்து) வீழ்கின்ற அன்னக் 
கூட்டங்களைப்  போல;   அவன் - அந்த இராவணனின்; 
மலைமிசைத் தோள்கள் மேல் - மலையினும் விஞ்சிய 
(வன்மைத்) தோள்களின்மேல்;வீழ்ந்து மாழ்கினார்
நிலைகலங்கிச் சோர்ந்து விழுந்தனர்.
 

மாழ்குதல் - அறிவு நிலை கலங்கல்.
 

(230)
 

9934.

தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும்,

எழு உயர் புயங்களும் மார்பும், எங்கணும் 

குழுவினர், முறை முறை கூறு கூறு கொண்டு 

அழுதனர் அயர்த்தனர், அரக்கிமார்களே. 

 

அரக்கிமார்கள்- இராக்கதப் பெண்டிர்; குழுவினர் -
கூட்டம் கூட்டமாய்; தலையும் தாள்களும்- தலைகளும்
கால்களும்; எழு உயர் புயங்களும்- கணையமரம் ஒத்த
தோள்களும்; மார்பும்- மார்புகளும்; (ஆகிய இராவணன்
அங்கங்களின்) எங்கணும்- எல்லாவிடங்களிலும்; முறை 
முறை கூறு கொண்டனர்
- முறை முறையாய் பகுத்துக் 
கொண்டவராகி; தழுவினர் தழுவினர் - பன்முறை தழுவி; 
அழுதனர் அயர்த்தனர்
- அழுது மயங்கினர்.
 

(231)