9935. | வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும் |
| பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார், |
| ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்- |
| திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல். |
|
வருத்தம் ஏது எனின்- (இந்த மகளிர்க்கு இது வரையில்) துன்பம் யாது என்றால்; அது புலவி - அது இராவணனிடம் நேர்ந்த புலவியேயாகும்; வைகலும் பொருத்தமே வாழ்வு என - நாடோறும் (அவன் மார்பில்) பொருந்தி வாழ்வதே வாழ்வாகும் என்று கருதி; பொழுது போக்கினார்- காலங்கழித்து வந்த அந்த அரக்கியர்; திருத்தமே அனையவன் - (இறைவன் படைப்பில் பலமுறை) திருத்திச் செம்மைப்பட்ட வடிவினைப் பெற்றவன் எனக் கூறத்தக்க வடிவினையுடைய இராவணனின்; சிகரத் தோள்கள் - தோள்களின் மேல்; ஒருத்தர் மேல் ஒருத்தர் வீழ்ந்து- ஒருவர் மேல் ஒருவர் விழுந்து; உயிரின் புல்லினர்- (அவன்) உயிரைத் தழுவுவதுபோல் தழுவினர். |
புலத்தலும் கலத்தலும் ஆகிய துன்ப இன்பங்களைத் தவிர வேறு துன்பமும் இன்பமும் அறியாத அரக்க மாதர், இன்றுதான் துன்பக் கடலில் மூழ்குவார் ஆயினர்; இராவணன் வடிவம் நான்முகனால் பன்முறை திருத்தித் திருத்தி, இறுதியில் செப்பமாக்கப்பட்ட, பூரண வடிவென்பார். ''திருத்தமே யனையவன்'' என்றார். இனி ''திருத்தமே அனைய வான் சிகரத் தோள்கள்'' என்று திருத்தத்தைத் தோள்களுக்கு ஏற்றினுமாம். திருத்தம் என்பதனை, தீர்த்தம் எனும் வட சொல்லாகக் கொண்டு, இராவணன் தோள்கள் வீரந்தாங்கிய தீர்த்தத் துறை போன்றவையென்று முந்தைய உரையாசிரியர்கள் உரை கூறினர். |
(232) |
9936. | இயக்கியர், அரக்கியர், உரகர் ஏழையர், |
| மயக்கம் இல் சித்தியர், விஞ்சை மங்கையர் - |
| முயக்கு இயல் முறை கெட முயங்கினார்கள் - தம் |
| துயக்கு இலா அன்பு மூண்டு, எவரும் சோரவே. |
|
இயக்கியர் அரக்கியர்- யட்ச மாதரும், இராக்கத மங்கையரும்; உரகர் ஏழையர்- நாகலோகப் பெண்களும்; மயக்கமில் சித்தியர்- மயக்கமற்ற சித்தசாதிப் பெண்டிரும்; விஞ்சை மங்கையர்- வித்தியாதர மகளிரும்; (ஆகிய) எவரும்- யாவரும்; தம் துயக்கிலா அன்பு மூண்டு- தம்முடைய தளராத அன்பின் முனைப்பால்; எவரும் சோர - அனைவரும் அறிவு சோர்ந்து; |