பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்41

அதுபொழுது அரக்கர் கோனும் அணிகொள் கோபுரத்தின் 
எய்தி
- அப்பொழுது அரக்கர் தலைவனாகிய இராவணனும் அழகு 
மிக்க  கோபுரத்தின்  மேலே   ஏறி; பொதுவுற நோக்கலுற்றான்-
அச்சேனையைப் பொதுவகையால்   நோக்கத் தொடங்கினவன்;
வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும்- ஏழு கடல்களையும்
விரைவாக ஒருங்கு காண (ஆவல் கொண்ட); பேதையின் காதல்
கொண்டான்
- அறிவிலி போல ஆசை கொண்டவனாய்; ஒரு நெறி
போகப் போக விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான்
-
தன் பார்வையை ஒரு நெறியே செல்லுமாறு செலுத்தி விதிமுறைப்படி 
தனித்தனியே காண்பேன் என்னும் விருப்பத்தை உடையவனானான்.
 

மிகப்பெரிய அச்சேனையை இராவணன் விரும்பியவாறு
தனித்தனியே காணவியலாது என்பதனைக் கூறவந்த கவிஞர்,
''வேலை ஏழும் கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல்
கொண்டான்'' என உவமை கூறினார். 
 

(8)
 

9255.

மாதிரம் ஒன்றின்நின்று, மாறு ஒரு திசைமேல் மண்டி, 

ஓத நீர் செல்வது அன்ன தானையை, உணர்வு 

கூட்டி,

வேத வேதாந்தம் கூறும் பொருளினை 

விரிக்கின்றார்போல்,

தூதுவர் அணிகள்தோறும் வரன்முறை காட்டிச் 

சென்றார்;

 

மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை மேல்- ஒரு
திசையில்    நின்று   மற்றொரு திசைமேல்; ஓதநீர் மண்டிச்
செல்வது அன்ன தானையை
- கடல்நீர் விரைந்து செல்வது
போன்று இலங்கை நோக்கிச் செல்லுகின்ற சேனையை; தூதுவர்
உணர்வு கூட்டி
- தூதுவர்கள் (கேட்கின்றவனாகிய) இராவணனுடைய
அறிவு கூடும்படி;   வேதவேதாந்தம்   கூறும்   பொருளினை
விரிக்கின்றார் போல்
- வேதங்களும் வேதாந்தங்களும் கூறும் 
பரம் பொருளின் இயல்பினை விரித்துக் கூறுவோர் போல,; அணிகள் 
தோறும் வரன் முறை காட்டிச் சென்றார்
- அணிகள் தோறும் 
உள்ளவர்களை வரன் முறையாக விளக்கிக் காட்டிச் சென்றார்கள்.
 

பரம் பொருள் வேத வேதாந்தங்களாலும் எட்ட முடியாதது.
அங்ஙனமாய பொருளை ஒருவாறு தர்க்கரீதியாக விளக்கிச்