பக்கம் எண் :

412யுத்த காண்டம் 

தொலைவுக்குச் சென்று விட்டன; போரில் தோற்று- போரில்
தோற்று; வீரம் போய் - வீரம் இழந்தும்; உரம் குறைந்தும்
- வலிமையிழந்தும்; வரம் குறைந்தும்- பெற்ற வரமெல்லாம்
இழந்தும்; வீழ்ந்தனையே-    (போர்க்களத்தில்)   வீழ்ந்து
கிடக்கின்றாயே; இராவணனை ஓர் அம்போ உயிர் 
பருகிற்று?
- இராவணனாகிய உன்னை (இராமன்) விட்ட ஓர் 
அம்பா உயிரையுண்டது? (நம்ப முடியவில்லை); மானுடவன் 
ஊற்றம் ஈதோ.
- மனிதன் ஒருவனின் வலிமை இத்தகையதோ?
 

(238)
 

9942.

'காந்தையருக்கு அணி அனைய சானகியார்

பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச்

சூர்ப்பணகை இழந்த மூக்கும்,

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால்

வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!

 

காந்தையருக்கு அணி அனைய - மகளிர்க்கெல்லாம்
அணி போன்ற; சானகியார் பேர் அழகும்- சீதா தேவியின்
பெருமைக்குரிய    அழகும்;     அவர்தம் கற்பும் - அவர்
(பூண்டிருந்தகற்பும்); ஏந்து புயத்து இராவணனார் காதலும்
- ஓங்கிய புயங்களையுடைய இராவணனார் (சீதைமேல் கொண்ட
தகாத) காதலும்; அச்சூர்ப்பணகை இழந்த மூக்கும் - அந்தச்
சூர்ப்பணகை   (இதனால்) இழந்து    போன மூக்கும்; வேந்தர்
பிரான் தயரதனார் பணியதனால்
-   மன்னர்க்கு மன்னனான
தயரதன் ஏவலினால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும்
- கொடிய கானகத்தே விரத வேடம் பூண்டு (இராமன்) வந்ததுவும்;
கடைமுறையே- கடைசியில்;  புரந்தனார்    பெருந்தவமாய்ப்
போயிற்று
- இந்திரனார் செய்த      பெருந்தவத்தின் பலனாக
முடிந்துவிட்டன.
 

மேற்பாடலில் ''ஓர் அம்போ இராவணனார் உயிர் பருகிற்று?''
என்ற வியப்புக்கு விடையாக, ''சானகியார் பேரழகும்.... விரதம்
பூண்டு போந்ததுவும்'' ஆக எல்லாம் இணைத்து இராவணனார்
உயிர் பருகின என்றவாறாம்.  காந்தையருக்கு      அணி  - 
''மடந்தைமார்களில்   திலகமே''    (கம்ப. 2072)    '' பெண்
அருங்கலமே'' (கம்ப. 2077) ''தெரிவைமார்க்கு ஒரு கட்டளை
எனச் செய்த திருவே'' (கம்ப.2078).