நீ- இலக்குவனே நீ; சோதியான் மகன்- சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; வாயுவின் தோன்றல்- காற்றுக் கடவுளின் மகனாகிய அனுமன்; மற்று ஏது இல் வானர வீரரொடு ஏகி- மற்றுள்ள குற்றம் இல்லாத குரங்கு வீரர்கள் ஆகியோருடன் புறப்பட்டுச் சென்று; நீதியானை- அற நீதியிற் சிறிதும் வழுவாத வீடணனுக்கு; ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை- முதற்கடவுளாகிய நாராயணன் தந்த வேத விதிப்படி; நெடுமுடி சூட்டுவாய்- சிறந்த கிரீடத்தைச் சூட்டுவாய்; |
ஏது - குற்றம். நீதியான் - வீடணன் என்பது முன்னும் கூறப்பட்டது. (கம்ப. 7625) பதினான்கு வருடம் வனவாசம் செய்வதாக மேற்கொண்ட விரதத்தால் இராமன் இலங்கை நகருட் புகாது இலக்குவனைச் சென்று முடிசூட்டச் செய்தான். கிட்கிந்தையில் சுக்கிரீவனுக்கு இலக்குவனைக் கொண்டு முடிசூட்டியதை இங்கு (கம்ப. 4116) நினைக. நீதியானை - உருபு மயக்கம்; நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. |
(2) |
9954. | என்று கூறி, இளவலொடு ஆரையும் |
| வென்றி வீரன் விடை அருள் வேலையில், |
| நின்ற தேவர் நெடுந் திரையோரொடும் |
| சென்று, தம் தம் செய்கை புரிந்தனர்.* |
|
வென்றி வீரன் - இராமன்; என்று கூறி - இவ்வாறு சொல்லி; இளவலொடு ஆரையும்- இலக்குவனோடு மற்றுள்ளவர்களுக்கும்; விடை அருள் வேலையில் - விடை கொடுத்த பொழுது; நின்ற தேவர்- (அது கேட்டு) அருகிருந்த தேவர்கள்; நெடுந் திசையோரொடும் - எண்திசைக் காவலர்களுடனும்; தம் தம் செய்கை புரிந்தனர்- சென்று தங்கள் தங்களால் (பட்டாபிஷேகத்துக்கு) முடிந்த உதவிகளைச் செய்வாராயினர். |
எண் திசைக் காவலர்: இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈகானன் என்போர். நின்ற தேவர் இவர் ஒழியப் பிறராகக் கொள்க. ஆரையும் உருபு மயக்கம். நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. ஆர்க்கும் விடை கொடுத்து என இயையும். |
(3) |
9955. | சூழ் கடல் புனலும், பல தோயமும், |
| நீள் முடித் தொகையும், பிற நீர்மையும், |
| பாழி துற்று அரி பற்றிய பீடமும், |