பக்கம் எண் :

428யுத்த காண்டம் 

ஆழி ஆன அரக்கனை ஆரியச் 

சூழி யானை துகைத்தது, சோபனம்!' 

 

ஏழை- பேதமை என்னும் அணிகலன் உடையாளே!; சோபனம்-
மிக்க மங்களம் உண்டாகட்டும்; ஏந்திழை- தரித்த அணிகலன்களை
உடையாளே!; வாழி- வாழ்வாயாக; ஆரிய சூழி யானை- மேன்மை
மிக்கவனாகிய  இராமபிரான்  என்கிற முகபடாம் அணிந்த யானை;
ஆழி  ஆன  அரக்கனை-   தீமைக்கு   வரம்பாகிய  இராவண
ராக்கதனை;   துகைத்தது-  அழித்   தொழித்தது;  சோபனம்-
(இனி உனக்கு)  மங்களம் உண்டாகட்டும் (தொடரும்).
 

'சோபனம்' என்பது மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்தும்
சொல். அது பன்முறை வந்து மங்கல வாழ்த்தாக ஆயிற்று. 
 

(16)
 

9968.

பாடினான் திரு நாமங்கள்: பல் முறை 

கூடு சாரியின் குப்புற்றுக் கூத்து நின்று 

ஆடி, அங்கை இரண்டும் அலங்குறச் 

சூடி நின்றனன், குன்று அன்ன தோளினான். 

 

குன்று அன்ன தோளினான் - மலை போன்ற கோள்களை
உடையவனாகிய அனுமான்; திரு நாமங்கள் பாடினான் - இராமன்
திருப்பெயர்களைப்  பாடிக் கொண்டு;   பல்முறை  கூடுசாரியின்
குப்புற்று
- பல தடவை இடம் வலமாகச் சென்று குதித்து; கூத்து
நின்று ஆடி
- ஆட்டம் ஆடுதலைச் செய்து; அங்கை இரண்டும் -
தன் அழகிய கை இரண்டையும்; அலங்கு உற சூடி நின்றனன்-
மாலை போல் தலைமேல் வளைவாகச் சூடிக் கொண்டு நின்றான்.
 

அலங்கல் என்பது மாலையாதலின் 'அலங்கு உற' என்பது,
மாலை போல் பொருந்த இரண்டு கைகளையும் தலைக்கு மேல்
கூப்பியது தலையைச் சுற்றிய மாலை போல் ஆயிற்று என்பதாம்.
மகிழ்ச்சி மிகுதியில் அங்கும் இங்கும் சுற்றிக் கூத்தாடல் மரபு.
 

 (17)
 

9969.

'தலை கிடந்தன, தாரணி தாங்கிய 

மலை கிடந்தனபோல்; மணித் தோள் எனும் 

அலை கிடந்தன; ஆழி கிடந்தென, 

நிலை கிடந்தது, உடல் நிலத்தே' என்றான்.