பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்43

நெடு விறலோய்! இவர் குசையின் தீவினின் உறைபவர் -
நீண்ட   வெற்றியை   உடையவனே!   இவர்கள் குசைத்தீவில்
வாழ்பவர்கள்; கூற்றுக்கும் விதிக்கும் வசையும் வன்மையும்
வளர்ப்பவர்
- யமனுக்கும் பிரமனுக்கும் பழியையும் வலிமையையும் 
வளர்க்கின்றவர்; வானநாட்டு உறைவார் இசையும் செல்வமும் 
இருக்கையும் இழந்தது, இங்கு இவரால்
- வானுலகில் வாழ்கின்ற 
தேவர்கள் தம் புகழையும் செல்வத்தையும் இருப்பிடத்தையும் 
இழந்தது இங்குள்ள இவராலேயாம்; விசையம் தாம் என நிற்பவர் 
- வெற்றி என்றால் அதற்குப் பொருள் தாமே என்னுமாறு வெற்றியே 
பெற்று நிற்கும் இயல்பினர் ஆவார்.
 

குசை - தருப்பைப்புல். அது நிறைந்திருந்தமை பற்றி 
அத்தீவு குசைத்தீவு எனப் பெயர் பெற்றது. கூற்றுக்கு வசையும்,
விதிக்கு வன்மையும் என இயையும். கூற்று இவர் உயிரைக்
கொள்ள வியலாமையால் வசை. அங்ஙனம் இவர் உயிரைக்
கொள்ளவியலாதவாறு படைத்தமையால் பிரமனுக்கு வலிமை
என்பதாம். விசையம் - வெற்றி. சென்ற போர் தோறும்
வெற்றியே பெற்று வருதலின் வெற்றியே இவர்கள் தாமோ 
எனப் பிறர் வியக்குமாறு வாழ்பவர் என்றவாறு, விசயம் என்ற
சொல் எதுகை நோக்கி விசையம் எனவாயிற்று. 
 

(11)
 

9258.

'இலவத் தீவினின் உறைபவர், இவர்கள்; பண்டு 

இமையாப்

புலவர்க்கு இந்திரன் பொன்னகர் அழிதரப் 

பொருதார்;

நிலவைச் செஞ் சடை வைத்தவன் வரம் தர,  

நிமிர்ந்தார்;

உலவைக் காட்டு உறு தீ என வெகுளி  

பெற்றுடையார்.

 

இவர்கள் இலவத்தீவினில் உறைபவர்- இவர்கள், இலவத்
தீவினில் வாழ்பவர்கள்; இமையாப் புலவர்க்கு இந்திரன்-
இமையா நாட்டமுடைய தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனது;
பொன்னகர் அழிதரப் பண்டு பொருதார் - பொன்மயமான
அமராவதி நகரம் அழிவெய்துமாறு முன்பு போர் செய்தவர்கள்;
நிலவைச் செஞ்சடை வைத்தவன் வரம் தர, நிமிர்ந்தார் -
பிறைச் சந்திரனைச் சிவந்த சடையில் வைத்த சிவபிரான் வரம் 
தந்தமையால் மேன்மை பெற்றவர்கள்; உலவைக் காட்டுஉறு தீஎன