9980. | 'ஆதலான், ஒன்று உதவுதல் ஆற்றலேன்: |
| 'யாது செய்வது?'' என்று எண்ணி இருந்தனென்: |
| வேத நல் மணி வேகடம் செய்தன்ன |
| தூத! என் இனிச் செய் திறம்? சொல்' என்றாள். |
|
வேத நல் மணி வேகடம் செய்தன்ன தூத- துளைத்துபயோகிக்கும் நல்ல இரத்தினத்தைச் சாணையிட்டு மெருகிட்டு துடைத்து வைத்தாற் போன்ற உத்தம குணங்களை உடைய தூதனாகிய அனுமனே!; ஆதலான் - இக்காரணங்களால்; ஒன்று உதவுதல் ஆற்றலேன் - பொருத்தமானதொரு பொருளை உனக்குக் கைம்மாறாகக் கொடுக்க இயலாதவளாக ஆனேன்; 'யாது செய்வது' என்று எண்ணி இருந்தனென் - இனி இவனுக்கு வேறு என்ன செய்யலாம் என்று நினைத்துச் சும்மா இருந்தேன்; இனிச் செய்திறம் என்? சொல் - இனி நான் செய்யும் செயல் யாது சொல்வாயாக. |
வேதம் - தொளையிடுதல் (வடசொல்) வேகடம் செய்தல் - சாணை பிடித்தல், பட்டை தீட்டுதல் எனினும் ஆம். |
(29) |
அனுமன் வேண்டுகோளைச் சீதை மறுத்தல் |
9981. | 'எனக்கு அளிக்கும் வரம், எம்பிராட்டி! நின் |
| மனக் களிக்கு மற்று உன்னை அம் மானவன் - |
| தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ? - |
| புனக் களிக் குல மா மயில் போன்றுளாய்!' |
|
எம்பிராட்டி- எம் தலைவியே!; புனக் களிக்குல மாமயில் போன்றுளாய்- காட்டின்கண் மகிழ்ச்சி மிகுந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்த மயிலைப் போன்றவளே!; எனக்கு அளிக்கும் வரம்- நீ எனக்குக் கொடுத்தருளும் வரமானது; நின் மனக்களிக்கு மற்று உன்னை அம்மானவன் தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ?- உன்னுடைய மனமகிழ்ச்சிக்கேற்ப உன்னை அப்பெருமை படைத்த இராமபிரானிடத்தில் கொண்டு சேர்ப்பதைக் காட்டிலும் சிறந்ததான வேறு ஒன்று இருக்கிறதா? |
மானவன் - பெருமையுற்றவன். மானம் என்பதன் அடியாக வந்த சொல். இனி, மானவன் - மனுவினது குலத்திற் பிறந்தவன் என்று வடசொல் முடிபாகக் கொள்ளுதலும் கூடும். தத்திதாந்த நாமம் என்பர். |
(30) |