பக்கம் எண் :

 மீட்சிப் படலம்435

9982.

என உரைத்தது, 'திரிசடையாள், எம் மோய்! 

மனவினில் சுடர் மா முக மாட்சியாள் 

தனை ஒழித்து, இவ் அரக்கியர்தங்களை 

வினையினில் சுட வேண்டுவென், யான்' என்றான்.* 

 

என உரைத்து- என்று (அனுமன்) சொல்லி (மேலும்);
எம்மோய்- எமது தாயே!; யான் மனவினில் சுடர் மாமுக
மாட்சியாள் திரிசடையாள் தனை ஒழித்து
- நன்மணிக்கற்கள்
போல ஒளிவிடும் முகமலர்ந்த தோற்றமுடையாளாகிய திரிசடை
நீங்கலாக; இவ்வரக்கியர் தங்களை- (உங்களைப் பயமுறுத்தித் 
துன்பம் செய்த) இந்த அரக்கியர்களை; வினையினில் சுட 
வேண்டுவன்
- கொடிய செயலால் சுட்டெரிக்க விரும்புகிறேன்.
 

மனவு - மணிகளுக்கான பொதுப்பெயர். மனவினில் என்பதற்கு
'மனம் போல' எனப் பொருள் உரைத்து, தூயதாகிய தன் மனம்
போல ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் முகம் உடையாள் திரிசடை
எனினும் ஆம். வினையினில் - வினை போல; தப்பாது
கெடுத்தற்கு உவமை. 
 

(31)
 

9983.

'உரை அலா உரை உன்னை உரைத்து, உராய் 

விரைய ஓடி, ''விழுங்குவம்'' என்றுளார் 

வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து, 

இரை செய்வேன், மறலிக்கு, இனி' என்னுமால். 

 

உன்னை உரை   அலா   உரை   உரைத்து- உன்னைச்
சொலத்தகாத வார்த்தைகளால் வைது;   விரைய   ஓடி உராய
விழுங்குவம் என்றுளர்
-  வேகமாக  ஓடிவந்து  மேல் விழுந்து
உன்னை விழுங்கிவிடுவோம் என்றுள்ளவர்களாகிய  இவ்வரக்கியரது;
வரைசெய் மேனியை- மலை போன்ற உடம்பை; வள் உகிரால்
பிளந்து
- வளவிய என் கை நகத்தால் பிளந்து; மறலிக்கு இரை
செய்வேன் இனி
- யமனுக்கு இரையாக ஆக்குவேன் இனிமேல்;
என்னும் - என்று சொல்லுவான்.
 

(32)
 

9984.

'குடல் குறைத்து, குருதி குடித்து, இவர் 

உடல் முருக்கியிட்டு உண்குவேன்' என்றலும், 

அடல் அரக்கியர், 'அன்னை! நின் பாதமே 

விடலம்; மெய்ச் சரண்' என்று விளம்பலும்.*