பக்கம் எண் :

 இராவணன் சோகப் படலம்5

வெதும்பியது போல இராவணன் தன்னிடத்துத் தோன்றிய புத்திர
சோகத்தினால் வெதும்பினான் என்றார். 
 

(7)

9193.

திருகு வெஞ் சினத் தீ நிகர் சீற்றமும், 

பெருகு காதலும், துன்பும், பிறழ்ந்திட, 

இருபது என்னும் எரி புரை கண்களும், 

உருகு செம்பு என, ஓடியது ஊற்று நீர். 

 

திருகுவெஞ்சினத்தீ    நிகர்    சீற்றமும்-   (பகைவர்
மேலெழுந்த) மாறுபட்ட கொடிய சினம் என்று சொல்லப்படுகின்ற
தீயை ஒத்த சீற்றமும்; பெருகு காதலும், துன்பும் பிறழ்ந்திட
- (மகன் மேல்) பெருகுகின்ற அன்பும் (அவன் இறந்தமையால்)
துன்பமும் மாறி   மாறித் தோன்றுதலால்;   இருபது என்னும்
எரிபுரை கண்களும்
- இராவணனுடைய தீயை ஒத்த இருபது என்ற
எண்ணிக்கையை உடைய கண்களும்; ஊற்று நீர் உருகு செம்பு 
என ஓடியது
- ஊற்றுகின்ற துன்பக் கண்ணீர் உருகிய செம்பு 
போலப் பெருகி ஓடியது. 
 

(8)
 

9194.

கடித்த பற் குலம், கற் குலம் கண் அற 

இடித்த காலத்து உரும் என எங்கணும், 

அடித்த கைத்தலம் அம் மலை, ஆழி நீர், 

வெடித்த வாய்தொறும் பொங்கின, மீச் செல. 

 

கற்குலம் கண் அற- மலைக்கூட்டங்கள் துகளாக அற்றுப்
போமாறு; இடித்த காலத்து உரும் என எங்கணும் - 'மேகம்
இடித்த    காலத்துத்   தோன்றும்    இடியொலியே'   என
எவ்விடத்தவரும் பேசுமாறு; பற்குலம் கடித்த- இராவணனது
பல்வரிசைகள் கடித்தன; அம்மலை வெடித்தவாய் தொறும் 
ஆழிநீர் பொங்கின மீச்செல
- அத்திரிகூட  மலை வெடித்த
வாய்தொறும்    கடல்    நீர்   பொங்கி மேல் வழியுமாறு;
கைத்தலம் அடித்த - அவன் கைகள் தரையில் மோதின. 
 

(9)
 

9195.

'மைந்தவோ!' எனும்; 'மா மகனே!' எனும்; 

'எந்தையோ!' எனும்; 'என் உயிரே!' எனும்; 

'முந்தினேன் உனை; நான் உளெனோ!' எனும்;- 

வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்.