பக்கம் எண் :

586யுத்த காண்டம் 

இராமன் பரதனைக் கண்டு மகிழ்தல்
 

10267.

தோன்றிய பரதனைத் தொழுது, தொல் அறச் 

சான்று என நின்றவன், 'இனைய தம்பியை, 

வான் தொடர் பேர் அரசு ஆண்ட மன்னனை, 

ஈன்றவள் பகைஞனை, காண்டி ஈண்டு' எனா, 

  

தொல்  அறச்சான்று  என   நின்றவன்-  பழமையான
அறத்துக்குச் சாட்சியாக  உள்ளவனாகிய அநுமான்; தோன்றிய
பரதனைத் தொழுது
- அங்கே   வந்த   பரதனை   வணங்கி
(இராமனுக்கு); இனைய தம்பியை- இத்தகைய   உடன்பிறப்பை;
வான்   தொடர்  பேரரசு  ஆண்ட   மன்னனை  -   மிக
உயர்ந்த பாரம்பரியம்   உள்ள  பெரிய சூரிய குல ஆட்சி செய்த
அரசனை; ஈன்றவள் பகைஞனை - பெற்ற தாயாகிய கைகேயிக்கு
எதிரியாக   இருந்தவனை;  ஈண்டு காண்டி- இங்கே காண்பாயாக;
எனா- என்று; தொடரும் 
 

(316)
 

10268.

காட்டினன் மாருதி; கண்ணின் கண்ட அத் 

தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லுங்கால், 

ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் 

கூட்டு உருக் கண்டன்ன தன்மை கூடினான். 

 

மாருதி காட்டினன் - அநுமன் காட்டினான்; கண்ணின் கண்ட
அத் தோட்டலர்  தெரியலான்  நிலைமை   சொல்லுங்கால் 
-
கண்ணாலே பரதனைப் பார்த்த அந்த இதழ் மலர்ந்த மாலை அணிந்த
இராமனது தன்மையைத்  தெரியச்   சொல்லுவோமானால்;   ஒட்டிய
மானத்துள் 
-  வானின்றிழிந்து   வந்த   விமானத்தில்;   உயிரின் 
தந்தையார் கூட்டு உரு
-  உயிர் போலச் சிறந்த தன் தந்தையாகிய
தசரத சக்கரவர்த்தியின் பொருந்திய வடிவத்தை; கண்டன்ன தன்மை
கூடினான்
- இலங்கையில்  இராவணவதத்தின்பின்  கண்டது போன்ற
தன்மையை அடையப் பெற்றான்.
 

பரதனைத் தந்தையாக இராமன் காணவும், இராமனைத் தந்தையாகப்
பரதன் காணவும் இக்காட்சி அமைந்து  ஒருவர்   ஒருவரிற்   புகுந்தாற்
போன்று அமைந்து நலம் செய்கிறது.
 

 (317)