பக்கம் எண் :

 விடை கொடுத்த படலம்631

வயிரத்திண்தோள் - கல்லைப் போல உருண்ட வலிய தோள்களை
உடைய; கடுந்திறல் மடங்கல் அன்னான் - மிக்க வலிமை
படைத்த சிங்கத்தைப் போன்றவனாகிய; எற்று நீர்க் கங்கை
நாவாய்க்கு   இறை குகன்
-   கரையோடு    மோதுகின்ற
நீர்ப்பெருக்கினை உடைய கங்கையில் உள்ள மரக்கலங்களுக்குத்
தலைவன் ஆகிய குகன்; வெற்றி வெஞ்சேனையோடும் - தன்னுடைய
வெற்றி பெற்ற கொடிய சேனையோடும்;தொழுது சூழ்ந்தான் -
இராமனை வணங்கிச் சுற்றி இருந்தான்.
 

(10)
 

இராமன் அனைவர்க்கும் முகமன் கூறல்
 

10342.

வள்ளலும் அவர்கள்தம்மேல் வரம்பு இன்றி வளர்ந்த

காதல்

உள்ளுறப் பிணித்த செய்கை ஒளி முகக் கமலம்

காட்டி,

அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து,

இனிதின் நோக்கி,

'எள்ளல் இலாத மொய்ம்பீர்! ஈண்டு இனிது

இருத்திர்' என்றான்.

 

வள்ளலும் - இராமபிரானும்; அவர்கள் தம்மேல் வரம்பு
இன்றி வளர்ந்த காதல்
- அத்துணைவர்களிடத்து அளவுபடாது
வளர்ந்த பேரன்பானது; உள்ளுறப்    பிணித்த   செய்கை-
தன்மனத்தை இறுகக் கட்டியிருக்கிற பாங்கினை; ஒளி முகக்
கமலம் காட்டி
- ஒளி   சிறந்த தனது   முகத்தாமரை மூலம்
காண்பித்து; அள்ளுறத் தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து-
நெஞ்சாரத் தழுவினவனைப் போல மனம் மகிழ்ச்சி அடைந்து;
இனிதின் நோக்கி - கருணைப் பார்வையால் இனிமையாகப்
பார்த்து; 'எள்ளல் இலாத மொய்ம்பீர் -     இகழப்   படாத
வலிமை படைத்தவர்களே!ஈண்டு இனிது இருத்திர் - இங்கே
இனிமையாக இருங்கள்; என்றான் -
 

(11)
 

10343.

நல் நெறி அறிவு சான்றோர், நான்மறைக் கிழவர்,

மற்றைச்

சொல் நெறி அறிவு நீரார், தோம் அறு புலமைச்

செல்வர்,