ஒருவனால் சூரபதுமன் அழிக்கப் பெறுவான்'' என்று அருள் பாலித்தார். அப்போது சனகாதி முனிவர்கள் நால்வரும் மனம் அடங்கும் மார்க்கம் என்னவென அருள் பாலிக்குமாறு வேண்டவே ஆண்டவன் கல்லாலின் மரத்தின் கீழ் யோக நிலையில் வீற்றிருந்து உணர்த்தி அந்நிலையிலேயே நீடித்து நின்றார். அவ்வாறு அவர் இருப்பின் மகவு தோன்றுவது எங்கே சூரனை அழிப்பது எங்கே எண எண்ணி மன்மதனை அழைத்து ஆண்டவனின் மோன நிலையைக் கெடுத்து மன்மத பாணங்கட்கு ஆட்கொள்ளச் செய்ய வேண்டுமெனத் தேவர்கள் வேண்டினர். அவ்வாறே மன்மதனும் செய்தான். சிவன் தன் தவ நிலையைக் கெடுக்க வந்த மன்மதனை வெகுண்டு தன் நெற்றிக் கண்ணின் நெருப்பால் சாம்பலாக்கினார். மன்மதனின் மனைவி இரதி ஆண்டவனை வேண்டவே, 'உன் கண்களுக்கு மட்டும் தெரிவான். உலகத்தார்க்கு அவன் தோன்றான்' எனக் கூறி எழுப்பி அருளினார். அன்று முதல் மன்மதன் தோன்றா. உருவினன் (அநங்கன்) ஆயினன் என்பது வரலாறு. |
34. மாவெலாம் தொலைத்து வெள்ளி மலை எடுத்ததில் |
அடங்கியுள்ள வரலாறு (2770, 2825, 3078) |
இராவணன் தன் வலியை நிலைநாட்ட எல்லாத் திக்குகளுக்கும் சென்று எதிர்த்தாரை வென்று வருகையில் குபேரனை எதிர்த்து வென்று அவன் பூந்தேரினைப் பறித்து அதன் மேல் ஏறித் திரும்பி வந்து கொண்டிருந்தான். அவ்வாறு திரும்பும் போது கைலை மலையை அணுகும் போது அவன் பூந்தேர் மேலும் செல்லவொட்டாமல் கயிலை தடுத்தது. காரணம் அறியாது மயங்கிய இராவணன் முன் நந்தியம் பெருமான் தோன்றி, சிவபெருமானின் இருப்பிடமான கைலை மலையின் பெருமை இது என்று சொல்லவும் அதனைக் கேளாமல் தசமுகன் வெகுண்டு கைலை மலையைப் பெயர்த்து எடுக்கின்றேன் எனத் தேரில் இருந்து குதித்து தன் இருபது கரங்களாலும் பெயர்த்து எடுக்க முனைந்த முயற்சியைச் சொல்வது இக்கதை. ஆனால் கைகள் மலையின் கீழ் அகப்பட்டுச் சிக்கித் துன்புற்றனவே தவிர அவனால் மலையை அசைக்கவும் இயலவில்லை. கைகளை எடுக்க முடியாமல் சிவன் தன் பெருவிரலால் கைலையை அழுத்தி ஊன்றி நின்றனன். |