சூரிய குலத்து மன்னர்களின் குரு வசிட்டர். சூரிய குலத்தில் தோன்றிய மன்னர்களில் ஒருவன் திரிசங்கு மகராசன் என்பவன். அவன் தன் குலகுருவாகிய வசிட்டரைப் பணிந்து தான் உடலோடு சுவர்க்கம் புக வழிகாட்டுதல் வேண்டும், அதற்கு வழி கூற வேண்டும் என வேண்டினான். அவரோ, யாவராயினும் இறந்த பின்னரே சுவர்க்கம் புக முடியும் என்றார். அரசனோ குருவோடு வெகுண்டு, தான் வேறொரு குருவை நாடிப் போவதாகச் சொன்னான். இதனைக் கேட்ட வசிட்டர், வெகுண்டு 'குரு நிந்தனை செய்த நீ சண்டாளன் ஆவாய்' என்று சபித்தார். குரு மனத்தைப் புண்படுத்திய திரிசங்கு சண்டாளன் ஆன முறையால் நகரை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. பல இடங்களில் அலைந்து திரிய வேண்டியதாயிற்று. அலைந்த காலத்து விசுவாமித்திர மாமுனியைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்ட அவரிடம் நடந்தவைகளைக் கூறி தனக்கு உதவவேண்டும் என்று வேண்டினான். அவரும் உடன்பட்டு ஒரு வேள்வி செய்தார். அவ்வேள்விக்காகத் தேவர்கள் வரவில்லை. அதனால் கோபம் கொண்டு அரசனை ஒரு தேரில் ஏறச்செய்து சுவர்க்கம் நோக்கி அனுப்பினார். விண்ணுலகத்தில் வல்லவர்களோ புலையன் சுவர்க்கம புகுவதனை விரும்பாமல் இவனைத் தள்ளினர். புலை மகனாக விளங்கும் திரிசங்கு கீழே விழாமல் விசுவாமித்திரர் தாங்கிக் கொண்டார். விண்ணுலகுக்கும் ஏறாமல், மண்ணுலகிலும் இறங்காமல் இடையில் நின்றான் திரிசங்கு. அவ்விடத்து சுவர்க்கலோகம் போன்றதொரு லோகத்தைப் படைத்தார். அது திரிசங்கு சொர்க்கம் எனப்படும். |