காட்டிக் கொடுத்த கய்யனேன் நான்- உன்னைப் பகைவன் கொல்ல வழி செய்து கொடுத்த சிறுமையனாகிய நான்; உய்வனே!' என்று உரைக்கும் அங்கு ஓர் தலை - உயிர் வாழ்ந்திருப்பேனோ?' என்று ஒருதலை சொல்லும். |
இராவணனுடைய பத்துத் தலைகளுள் மூன்று தலைகள் கூறியவை இங்கு கூறப்பெற்றன. வாய் கூறியதைத் தலை கூறியதாகச் சொன்னது தானியாகுபெயர். கய்யன் - சிறுமையுடையவன். கை - சிறுமை. தான் செய்த செயலுக்குத் தானே பொறுப்பேற்று முந்திச் சென்று உயிர் விடாமல், தன் அன்புக்குரிய மகனை உயிர் விடச் செய்த சிறுமை இராவணனை வாட்டுகின்றது. |
(16) |
9202. | 'எழுவின் கோலம் எழுதிய தோள்களால் |
| தழுவிக் கொள்கலையோ!' எனும், ஓர் தலை; |
| 'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே! |
| செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை. |
|
ஓர் தலை; 'எழுவின் கோலம் எழுதிய தோள்களால் - இராவணனது ஒருதலை ''சந்தனக்கோலம் எழுதிய இரும்புத்தூண் போன்ற தோள்களால்; 'தழுவிக் கொள்கலையோ!' எனும்- தழுவிக்கொள்ள மாட்டாயோ?'' என்று சொல்லும்; ஓர் தலை, 'செழு வில் சேவகனே! 'உழுவைப் போத்தை - மற்றொரு தலை 'செழுமையான வில்லேந்திய வீரனே! ஆண்புலியை; உழை உயிர் உண்பதே!' எனும்- பெண்மான் உயிர் வாங்குவதோ?' என்று சொல்லும். |
எழு - இரும்புத்தூண். உழுவைப் போத்து - ஆண்புலி. உழை - பெண்மான். ஆடவர் தோளுக்கு எழு - 'எழுவுறழ் திணிதோள்' (பெருங் 2, 6, 131) தோளில் எழுதுதல்; 'எழிற்றோள் எழுதி' (பெருங், 1, 34, 201) வீரனுக்குப் புலிப்போத்து; 'புலிப்போத்தன்ன புல்லணற்காளை' (பெரும்பான். 138) 'வயப்புலிப் போத்தன்னார்' (பெரி. ஏனாதி 13) புலிப்போத்து, 'பொறி வரியிடும் புலிப்போத்து நவ்வி வெரீஇ' (பெருங், 1, 54, 37) |
(17) |
9203. | 'நீலம் காட்டிய கண்டனும், நேமியும் |
| ஏலும் காட்டின் எறிந்த படை எலாம் |
| தோலும் காட்டி, துரந்தனை; மீண்டும் நின் |
| ஓலம் காட்டிலையோ!' எனும், ஓர் தலை.* |