ஆறிய அறிவன் கூறி அளித்தலும்- துயர்தீரப்பெற்ற அறிவனாகிய முனிவன் உரிய மந்திரங்களைக் கூறி. ஈந்ததும்; உம்பர்தம் படைகள் எல்லாம் - தெய்வத்தன்மை உடைய அப்படைக்கலன்களெல்லாம்; தேறிய மனத்தான் செய்த - தெளிந்த மனம் உடையவன் முன்பு செய்த; நல்வினைப் பயன்கள் எல்லாம் - நல்வினைப் பயன் அனைத்தும்; மாறிய பிறப்பில் தேடிவருவ போல் - மாறி எடுத்த அடுத்த பிறவியிலும் செய்தவனைத் தேடிவந்து அடைவது போல; ஊறிய உவகை யோடும் - ஊற்றம் மிக்க களிப்போடும்; அண்ணல் தன்பால் வந்த - பெருமைமிகுந்த ராமபிரானிடம் வந்து சேர்ந்தன. ஆறிய: துயர் நீங்கிய. இந்திரியச் செயல்கள் தணியப்பெற்ற எனவும் கூறுதல் பொருந்தும். அறிவன்: ஞானி. கூறி அளித்தல்: உபதேசம் செய்து கொடுத்தல். செய்த: முற்பிறப்பில் செய்த. மாறிய பிறப்பு: வேறாகிய பிறப்பு. அன்று. ஏ: அசைகள். விசுவாமித்திர முனிவன் - கூறி அளித்தலும் - படைகள் நல்வினைப்பயன் செய்தவனை நாடி வந்தடைதல் போல வந்தன என்பது கருத்து. 2 |