2. மந்தரை சூழ்ச்சிப் படலம் இராமனுக்கு முடிசூட்டுவிழா நடக்க இருப்பதை அறிந்த கைகேயியின் தோழி மந்தரை என்பாள் அவ்விழாநடைபெறாதவாறு செய்த சூழ்ச்சியைச் சொல்லும் படலம் என்பது பொருள். மந்தரை - கைகேயியின்தோழி. கேகய நாட்டிலிருந்து கைகேயியுடன் வந்தவள். கூனல் ஆக இருந்த காரணத்தால் ‘கூனி’ எனவும் வழங்கப்பெறுபவன். மந்தரா - மனத்தைக் கலக்குபவன். வடமொழிச் சொல் மந்தரை என வந்தது- கைகேயியின் மனத்தைக் கலக்குபவன் என்கின்ற காரணத்தால் வந்த பெயர். சூழ்ச்சி - சூழ்தல், ஆராய்தல், ஆலோசனை என்னும் பொருளில் வரும். “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” (குறள் - 671) இங்கே சூழ்ச்சி - தீய ஆலோசனை என்க. இனி வஞ்சனை, சதி, சூது எனவும் அதன் தன்மைப்பற்றிகூறுவதும் உண்டு. இராமன் முடிசூட இருக்கும் செய்தியைக் கோசலையிடம் மங்கையர் அறிவித்தலும், கோசலைசுமித்திரையுடன் மகிழ்ந்து திருமால் கோயில் சென்று வழிபட்டுக் கோதானம் புரிதலும், தயரதன் முடிசூட்டு விழாவிற்குரிய நல்நாள் நாளையே என்பது அறிந்து, வசிட்டனை வரவழைத்து இராமனுக்கு அறிவுரை வழங்கும்படி கூறுதலும், வசிட்டன் இராமன் மனை புகுந்து அவனுக்கு அறிவுரை கூறுதலும், இராமன்வசிட்டனுடன் திருமால் கோயிலை அடைதலும், இராமனுக்குத் தீர்த்த நீராட்டிச் சடங்குகள் செய்யப்பெறுதலும், நகரமாந்தர் மகிழ்ச்சியும், நகர் அழகு செய்தலும், அது கண்ட மந்தரையின் சீற்றமும், இராமன்மேல்கொண்ட கோபத்தோடு கைகேயியின் அரண்மனை அடைந்து உறங்கும் கைகேயியை அவள் எழுப்புதலும், கைகேயியிடம்இராம பட்டாபிஷேகச் செய்தியை மந்தரை கூறுதலும், அதுகேட்டு அவள் மகிழ்ந்து மாலை அளித்தலும், அளித்த பொன்மாலையை அறத்து வீசி மந்தரை பல மாற்றத்தால் கைகேயியை மனமாற்றம் செய்தலும், மனம் மாறிய கைகேயி மந்தரையைப் பாராட்டி ஆலோசனை கேட்டலும், உபாயம் கூறுதலும், உரைத்த மந்தரையைப்பாராட்டி மகிழ்ந்து பெரும்பரிசுகள் அளித்துக் கைகேயி அவ்வாறே செய்வேன் என உறுதியளித்தலும்ஆகிய செய்திகள் இப்பதியில் கூறப்பெறுகின்றன. கோசலையிடம் மங்கையர் நால்வர் மகிழ்ச்சியோடு செய்தி சொல்லப் போதல் கலிவிருத்தம் 1399. | ஆண்டை அந் நிலை ஆக - அறிந்தவர், பூண்ட காதலர், பூட்டு அவிழ் கொங்கையர், |
|