தவறு செய்யின் அவன்மீது அம்பு தொடுக்க வேண்டாம் என ஒரு வரம் வேண்டினான். அனுமனின் ஆற்றலை இராமனுக்கு வாலி எடுத்துரைத்தான். சுக்கிரீவனுக்குப் பல அறிவுரைகள் கூறி, அவனை இராமனிடத்தில் அடைக்கலப்படுத்தினான். போர்க்களம் வந்த அங்கதன், குருதி வெள்ளத்தில் தந்தையைக் கண்டு அரற்ற, வாலி அவனைத் தேற்றி, இராமன் பெருமைகளை அறிவுறுத்தினான். அவனை இராமனிடம் கையடைப்படுத்த, இராமன் அங்கதனுக்கு உடைவாள் அளித்து ஏற்க, வாலி வீடு பேறு அடைந்தான். வாலி மார்பில் தைத்த அம்பு இராமனிடம் மீண்டது. வாலிக்கு ஏற்பட்ட துயர் கேட்டுத் தாரை போர்க்களம் உற்று, வாலியின் மேல் வீழ்ந்து புலம்பினாள். அவளை அந்தப்புரம் செலுத்தி, அனுமன் வாலிக்குரிய இறுதிக் கடன்களை அங்கதனைக் கொண்டு செய்வித்தான். அந்நிலையில் கதிரவன் மறைய இருள் சூழ்ந்தது. இராமன் சீதையின் நினைவோடு இரவுக்கடலை அரிதில் நீந்தினான். இராமன் முதலியோர் சென்ற மலைவழி எழுசீர் ஆசிரிய விருத்தம் 3935. | வெங் கண் ஆளிஏறும், மீளி மாவும், வேக நாகமும், சிங்கஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார், தங்கு சாலம், மூலம் ஆர் தமாலம், ஏலம் மாலைபோல் பொங்கு நாகமும், துவன்று, சாரலூடு போயினார். |
வெங்கண் ஆளி ஏறும் -அச்சத்தைத் தரும் கொடிய கண்களை உடைய ஆண் யாளியும்;மீளி மாவும் -வலிமை மிக்க புலியும்;வேக நாகமும் -விரைந்து செல்லும் யானையும்;சிங்க ஏறு இரண்டொடும் - இரண்டு ஆண் சிங்கங்களுடன்;திரண்ட அன்ன செய்கையார் -ஒன்று கூடிச் சென்றன போன்ற செய்கையரான சுக்கிரீவன் முதலான வானர வீரர்கள்; தங்கு சாலம் -நிலை பெற்ற ஆச்சா மரங்களும்;மூலம் -மூலம் என்னும் மரங்களும்;ஆர் - ஆத்தி மரங்களும்;தமாலம் -பச்சிலை மரங்களும்; ஏலம் -ஏலமும்;மாலை போல் பொங்கு நாகமும் -மாலைகளைப் போல மலர்கள் நிறைந்து விளங்கும் சுரபுன்னை மரங்களும்;துவன்று -நெருங்கி; சாரலூடு போயினார் -மலைச் சாரல்கள் வழியாகச் செல்லலானார்கள். வீரர்களுள் சிறந்தவர்கள் இராமலக்குவராதலின் இருவரும் 'சிங்க ஏறு இரண்டு' எனக் குறிக்கப்பட்டனர். வெங்கண் ஆளி ஏறு என்றது சுக்கிரீவனை. மீளிமா என்றது அனுமனை. வேக நாகம் என்றது நளன், நீலன், தாரன் ஆகிய வானர வீரர்களைக் குறிக்கும். இராமலக்குவரை இரண்டு சிங்கங்களாகத் திரிசடை |