3. காட்சிப்படலம் அனுமன்பிராட்டியைத்தேடி வந்தபோது, பிராட்டி இருந்த நிலையையும் அவள் எண்ணங்களையும் இப் படலம் விவரிக்கிறது. பிராட்டிமென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்து பிரிவுத் துயரமே பெண்ணுருக்கொண்டாற் போல் விளங்குகிறாள். அவள் என் நிலையைப் பெருமான் உணரவில்லையோ என்று கருதி நெருப்பிற் புக்காற் போன்று வருந்தினாள். பழைய நினைவுகளெல்லாம் பிராட்டியைக் கொல்லாமற் கொல்கிறது. பிராட்டி திரிசடையை நோக்கி, இடப்புறம் துடிக்கின்றது. இனி யாது நிகழும் என்று கேட்கிறாள். திரிசடை எதிர்காலத்தில் இலங்கையில் நிகழும் நிகழ்ச்சியைத் தான் கனவில் கண்டதைக் கூறிப் பிராட்டியைத் தேற்றுகிறாள். இச் சமயத்தில்தான் அனுமன் பிராட்டியின் தவக் கோலத்தைக் கண்டு, பிராட்டியின் மனத்தவத்தை வியந்து, அறம் வெல்லும் ! பாவம் தோற்கும் !’ என்னும் சத்தியத்தை எண்ணிப் பூரிக்கிறான். அப்போது அங்கே இராவணன் அரக்கியர் சூழப் பெருமிதத்துடன் தோன்றுகிறான். அவன் - பிராட்டியை நோக்கி, பலவாறு காதல் மொழிகளை இரந்து பேசி பூமியில் வீழ்ந்து வணங்கினான். அது கேட்ட பிராட்டிக்குச் சீற்றம் வந்து வெகுண்டு பேசுகின்றாள். இராவணன் சீற்றங்கொண்டு இவளைப் பிளந்து தின்பேன் என்று கருதுகிறான். அச் சீற்ற நெருப்பைக் காதல் அவிக்கிறது. இராவணன் தன் செய்கைக்குப் பொருந்தாக் காரணம் புகல்கிறான். பலபடியாகப் பேசி பிராட்டியின் மனத்தை மாற்ற முயல்கிறான். இறுதியில் இராவணன் அரக்கிகளைப் பார்த்து, ‘இவளை எப்படியாவது வசப்படுத்துங்கள்’ என்று கூறிச் செல்கிறான். அரக்கிகள் பிராட்டியை வருத்துகிறார்கள். திரிசடையின் சொற்களால் பிராட்டி தெளிவு பெறுகிறாள். இப் படலம் புனித ஆன்மாவின் பத்து இந்திரியங்களோடு கூடிய மனம் ஆன்மாவுக்கு உலக நாட்டத்தை உண்டுபண்ண முயல்வதையும், புனித ஆன்மா மனத்தை வென்று இறைவன்பால் சார்ந்து நிமிர்ந்து நிற்பதையும் குறிக்கிறது. அனுமன் அசோகவனத்தை யடைதல் கலித்துறை 5069. | மாடு நின்றஅம் மணி மலர்ச் சோலையை மருவி, ‘தேடி, அவ்வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை; |
|