உறழ் மேனி அண்ணல் -பவழம்போல் சிவந்த திருமேனியை உடைய சிவபிரான்; மேருவில் குழைய - மேரு மலையாகிய வில் வளைய; தோளால் - தனது தோள் வலியால்; முப்புரத்து எய்த கோலே ஒத்தது - திரிபுரங்களின் மீது தூண்டிய (திருமாலாகிய) அம்பே போன்றிருந்தது. அனுமன் வாலுக்கு,முப்புரம் எரித்த அம்பு உவமை ஆயிற்று. ‘முன்னையிட்ட தீ முப்புரத்திலே, பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்’ என்ற பட்டினத்தார் பாடல் இங்கு சிந்திக்கத் தக்கது. அனுமன், சிவபிரான் அமிசம் என்பது உறுதிப்படுகின்றது. (136) 5941. | வெள்ளியின் பொன்னின், நானா விளங்கு பல் மணியின், விஞ்சை தெள்ளியகடவுள்-தச்சன் கை முயன்று அரிதின் செய்த தள்ள அருமனைகள்தோறும், முறை முறை தாவிச் சென்றான்; ஒள் எரியோடும்,குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான். |
வெள்ளியின்பொன்னின் நானா விளங்கு பல் மணியின் - வெள்ளியாலும் தங்கத்தாலும், பலவகைப்பட்ட பிரகாசிக்கின்ற அழகிய இரத்தினங்களாலும்; விஞ்சை தெள்ளிய கடவுள் தச்சன் - சிற்பக்கலையில் தேர்ந்தவனாகிய தெய்வத் தச்சனான் விசுவகர்மன்; கை முயன்று அரிதின் செய்த - தன் கைவன்மையால் முயற்சி செய்து அருமையாக அமைத்த; தள்ள அரு மனைகள் தோறும் - அழித்தற்கு அருமையான மாளிகைகளில் எல்லாம்; ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் - ஒள்ளிய நெருப்புடனே மலையின் மீது கற்பாந்த காலத்தில் விழுகின்ற பேரிடியைப் போன்றவனாய்; முறை முறை தாவிச் சென்றான் - வரிசையாகத் தாவித் தாவித் தீயை வைத்துக் கொண்டு செல்வானாயினான். இலங்கை நகரத்துமாளிகைகளுக்கு மலைகளும், தன் வாலின் நெருப்போடு பாயும் அனுமனுக்கு நெருப்புடன் வீழும் இடியும் உவமைகளாக வந்தன. கை முயலுதல் - செய்வதறிந்து செய்தல். (137) |