பக்கம் எண் :

792சுந்தர காண்டம்

    மாயைபுணர்ப்பு அற கல்லி - மாயையின் கலப்பு நீங்க, (அதனைத்
தமது ஞானத்தால்) களைந்து; தம் இயல்பு எய்தும் - தமது இயல்பான
(ஆத்மஞான) நிலையை அமையும்; கருத்தர் போல் - நோக்கமுடைய
மேலோர் போல; இல்லில் தங்கும் வயங்கு எரி யாவையும் - அரக்கர்களது
வீடுகளில் தங்கியிருந்த எரிகின்ற நெருப்புகளெல்லாம்; சொல்லில் தீர்ந்தன
போல்வன -
இராவணனது கட்டளைச் சொல்லினின்று விடுபட்டன
போல்பவையாய்; தொல் உரு புல்லிக் கொண்டன - தமது தொன்மையான
உருவைத் தழுவிக் கொண்டு விட்டன.

     இராவணனுக்குஅஞ்சி, இலங்கை நகரில் அரக்கர்களுக்குப் பயன்படும்
அளவில், அது வரை கட்டுப்பட்டிருந்த நெருப்புகள், (அக்கினி தேவன்)
இப்போது, இராவணன் ஆணையை, மீறி, அனுமன் வைத்த நெருப்புடன் ஒன்று
பட்டுத் தமது பழைய உருவத்தை அடைந்து விட்டன. இது, மாயைப்புணர்ப்பு
அற்ற ஆன்மா, தமது உண்மை நிலையை அடைந்தது போல இருந்தது என்க.
சொல் - கட்டளை. தொல் உரு - கட்டுப்பாட்டுக்கு முன் இருந்த உருவம்;
மாயை - உண்மை நிலையை அறிய முடியாது ஆன்மாவைக் கட்டுப்படுத்திக்
கொண்டிருக்கும் ஒரு ஆற்றல்; புணர்ப்பு - கலப்பு; தம் - இங்கு ஆன்மாவைச்
சுட்டியது.                                                   (6)

5949.

ஆயது அங்குஓர் குறள் உரு ஆய், அடித்
தாய் அளந்து,உலகங்கள் தரக் கொள்வான்,
மீ எழுந்தகரியவன் மேனியின்,
போய் எழுந்துபரந்தது-வெம் புகை.

     அங்கு ஓர் -அக்காலத்தில், முதலில் ஒரு; குறள் உரு ஆய் -
வாமனவடிவாகச் சென்று; தர - (மாவலி தனக்குக்) கொடுக்க; உலகங்கள்
அடி தாய் அளந்து கொள்வான் -
மூவுலகங்களையும், தன் அடிகளால் தாவி
அளந்து கொள்ளும் பொருட்டு; மீ எழுந்த கரியவன் மேனியின் -
மேலோங்கி வளர்ந்த கருநிறம் உடைய திருமாலின் திரு மேனியைப் போல;
வெம் புகை எழுந்து போய் பரந்தது ஆயது - வெப்பமான புகை, மேல்
எழுந்து சென்று எங்கும் பரந்ததாக ஆயிற்று.

     மேல் எழுந்தகரும்புகை, உலகம் அளக்க எழுந்த திரிவிக்கிரமனான
திருமாலைப் போல ஆயிற்று என்க. நிறத்தாலும், மேல் எழுதலாலும்
வெம்புகை, திருமாலை ஒத்திருந்தது.                             (7)